சேதம் அடைந்த 100 அடி சாலை மேம்பாலம்


சேதம் அடைந்த 100 அடி சாலை மேம்பாலம்
x

புதுவை 100 அடி சாலை மேம்பாலம் சேதம் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் 100 அடி சாலையில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இங்கு ரெயில்வே கேட் மூடப்படும்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு அங்கு மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ரூ.35.72 கோடி மேம்பாலம் அமைக்கப்பட்டது.

கடலூரில் இருந்து வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்த பாலத்தின் மேல் பகுதியில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுவதும், அவை சீரமைக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

விபத்து அபாயம்

இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் பாலத்தின் நடுப்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே பயணம் செய்து வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது போதாத குறைக்கு பாலத்தின் உள்ள மின்விளக்குகள் ஒருபகுதியில் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு அந்த பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story