பொது சுகாதார அவசரநிலை பிரகடனம்


பொது சுகாதார அவசரநிலை பிரகடனம்
x

காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால்

காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரக்குழு ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீ ராமுலு இன்று 2-ம் முறையாக காரைக்காலில் மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வயிற்றுப்போக்கு அதிகரிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய்தொற்று அதிகளவில் பதிவாகி வருகின்றன. மேலும் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த சுகாதாரக் குழுவின் ஒருங்கிணைப்புடனும், நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடனும் அனைத்து மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்களுக்கு அறிவுரை

பொது மக்கள் விழிப்புடன் இருப்பதுடன், கொதிக்கவைத்த தண்ணீரை (20 நிமிடங்கள் கொதிக்கவைத்து ஆறியப்பிறகு) குடிக்கவும்.

சாப்பிடும் முன், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும். சரியாகக் கழுவி சமைத்த உணவை உட்கொள்ளவும். பாதுகாப்பான கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும். வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

ஓ.ஆர்.எஸ. கரைசலின் முக்கியத்துவம் குறித்து அறிந்து, வீட்டிலேயே ஓ.ஆர்.எஸ்.தீர்வை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள். இது நோயின் தீவிரத்தை தடுக்க உதவும் (உள்ளூர் நல்வழித்துறை குழு மற்றும் சுகாதார குழு உதவும்). அக்கம்பக்கத்தினர், மூத்த குடிமக்கள் யாராவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும். குடியிருப்பு பகுதியில் நீர் வடிகால் அமைப்பில் ஏதேனும் கசிவு காணப்பட்டால் உரிய அதிகாரிக்கு தெரிவிக்கவும்.

மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுவது நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும். மருத்துவ அதிகாரிகளிடம் முன்கூட்டியே புகார் அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story