கல்வித்துறை அலுவலகத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் முற்றுகை


கல்வித்துறை அலுவலகத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் முற்றுகை
x

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுவை காராமணிக்குப்பத்தில் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த வசதிகளை செய்துதரக்கோரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்தனர். பள்ளியில் இருந்து அவர்கள் ஊர்வலமாக கல்வித்துறை அலுவலகம் நோக்கி வந்தனர்.

முற்றுகை

அவர்கள் 100 அடி சாலையில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வித்துறைக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நிறைவேற்றி வைப்பதாக உறுதியளித்தனர். அதை ஏற்று மாணவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்துசென்றனர்.


Next Story