அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த பொய் புகார்களை கூறுகிறார்


அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த பொய் புகார்களை கூறுகிறார்
x

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இந்த அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்யான புகார்களை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி வருகிறார் என்று அமைச்சர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இந்த அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்யான புகார்களை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி வருகிறார் என்று அமைச்சர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

புதுவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஸ்னியா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன், ஐ.ஜி. சந்திரன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கஞ்சா நடமாட்டத்தை முழுமையாக ஒழிப்பது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணியில் குழப்பம் இல்லை

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவது, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற பல்வேறு ஆலோசனைகள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவே கவர்னரை நாங்கள் சந்தித்தோம். முதல்-அமைச்சருக்கும் எங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையால் அவர் பேசுகிறார். நானும் அரசியலில் இருக்கிறேன் என்று காண்பிக்க அரசின் மீதும், முதல்-அமைச்சர் மீதும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உண்மைக்கு புறம்பான, பொய்யான புகார்களை கூறிக்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story