கழிவறை திட்டத்தில் பல கோடி ஊழல்: என்ஜினீயர், கல்லூரி இயக்குனர் சஸ்பெண்டு - கவர்னர் அதிரடி


கழிவறை திட்டத்தில் பல கோடி ஊழல்: என்ஜினீயர், கல்லூரி இயக்குனர் சஸ்பெண்டு - கவர்னர் அதிரடி
x

கழிவறை கட்டியதில் மோசடியில் ஈடுபட்டு அரசு பணத்தை ஊழல் செய்த இளநிலை என்ஜினீயர், கல்லூரி இயக்குனர் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

கழிவறை கட்டியதில் மோசடியில் ஈடுபட்டு அரசு பணத்தை ஊழல் செய்த இளநிலை என்ஜினீயர், கல்லூரி இயக்குனர் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். புதுவையில் கடந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வட்டார வளர்ச்சி முகமை மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டது.

இத்திட்டத்தில் புதுவை அரியாங்குப்பம் முன்னாள வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா ஆகியோர் கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்டாமல் கட்டியதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே விவேகானந்தன் காரைக்கால் பொதுப்பணித்துறைக்கும், பிரேமா காமராஜர் என்ஜினீயர் கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதில் கழிவறை கட்டாமல் பயனாளிகள் பெயரை பயன்படுத்தி அரசு பணத்தை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

அதனடிப்படையில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் விவேகானந்தன் மற்றும் அரசு என்ஜினீயர் கல்லூரி இயக்குனர் பிரேமா ஆகியோரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story