புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள் தீவிரம்


புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள் தீவிரம்
x

புதுவை பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

புதுச்சேரி

புதுவை பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

மேம்பாட்டு பணி

புதுவை புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.29 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகளை கடந்த மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்.

இதனிடையே இந்த மேம்பாட்டு பணிகளுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. பஸ்நிலைய பகுதிகளில் கடை வைத்திருப்போர், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தினார்கள். இதனால், மேம்பாட்டு பணிகள் தற்காலிகமாக தடைபட்டது. தங்களது கோரிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தும் பேசினார்கள். அப்போது அவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

கட்டிடம் இடிப்பு

இதைத்தொடர்ந்து தற்போது பஸ்நிலைய மேம்பாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளன. பஸ்நிலைய மையப்பகுதியில் வணிக நிறுவனங்கள் வர உள்ளன. இதனை கட்டுவதற்கு வசதியாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதனுள் கடைகளின் கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் (கடலூர், உள்ளூர் பஸ்கள் நிறுத்துமிடம்) உள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் இடைஞ்சல் இல்லாமல் செல்ல பிளாட்பாரங்களும் இடிக்கப்பட்டு தாரளமாக வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புறக்காவல் நிலையம்

பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஏற்கனவே இருந்த கட்டிடத்துக்கு எதிர்பகுதியில் இரும்பு தடுப்புகள் கொண்டு தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளை 8 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story