ரூ.1,150 கோடிக்கு திட்டப்பணிகள்


ரூ.1,150 கோடிக்கு திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 27 Jun 2023 4:27 PM GMT (Updated: 28 Jun 2023 9:16 AM GMT)

கடந்த 2 ஆண்டுகளில் ராஜ்பவன் தொகுதியில் ரூ.1,150 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

புதுச்சேரி

கடந்த 2 ஆண்டுகளில் ராஜ்பவன் தொகுதியில் ரூ.1,150 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தான் வகிக்கும் துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு 2 ஆண்டு பணிகளை முடித்து 3-வது ஆண்டில் காலடியெடுத்து வைத்துள்ளது. பொதுப்பணித்துறை மூலம் ரூ.201 கோடிக்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்துள்ளன. இப்போது ரூ.341 கோடிக்கு வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்ததாக ரூ.201 கோடிக்கு வேலைகள் செய்ய உள்ளோம். இதுவரை 130 கி.மீ. சாலைகள் போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.134 கோடிக்கு வேலைகள் நடந்துள்ளது.

ரூ.1,150 கோடிக்கு திட்டப்பணிகள்

பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் பிற துறைகளில் கட்டிட பணிகள் என ரூ.105 கோடிக்கு வேலை நடந்துள்ளது. நிலத்தடிநீர் பிரிவின் மூலம் ரூ.85 கோடிக்கு வேலைகள் முடிந்துள்ளது. மேலும் ரூ.194 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன. பொதுப்பணித்துறையில் 502 பேருக்கு பதவி உயர்வும் வழங்கியுள்ளோம். சுற்றுலாத்துறையில் ரூ.124 கோடிக்கு பணிகள் நடந்துள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் எனது தொகுதியான ராஜ்பவனில் நடந்து முடிந்த பணிகள், நடக்கும் வேலைகள் என ரூ.1,150 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐகோர்ட்டு கிளை

மத்திய மந்திரி எல்.முருகன் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) புதுச்சோி கம்பன் கலையரங்கில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். அப்போது மீனவர்களுக்கு படகுகள், கிசான் கார்டுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். புதுவைக்கு ஐகோர்ட்டு கிளை கேட்டுள்ளோம். விரைவில் புதிய நீதிபதிகள், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உப்பனாறு பாலத்தை கட்டி முடிக்க கூடுதலாக ரூ.13 கோடி கொடுக்கவும் உத்தரவு வந்துள்ளது. எனவே, விரைவில் உப்பனாறு மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story