பாலம் அமைக்க நவீன கருவி மூலம் ஆய்வு


பாலம் அமைக்க நவீன கருவி மூலம் ஆய்வு
x

மரப்பாலம் சந்திப்பில் பாலம் அமைக்க நவீன கருவி மூலம் ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி

மரப்பாலம் சந்திப்பில் பாலம் அமைக்க நவீன கருவி மூலம் ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளது.

போக்குவரத்து நெருக்கடி

புதுவை மரப்பாலம் சந்திப்பு பகுதி நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம், கும்பகோணம், வேளாங்கண்ணி, போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சந்திப்பை கடந்து தான் செல்ல வேண்டும்.

புதுவையின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் நகரப்பகுதிக்கு வர இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மரப்பாலத்தில் மேம்பாலம்

எனவே மரப்பாலம் சந்திப்பை மேம்படுத்தி, அரியாங்குப்பம் பாலம் வரை சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சதுக்கங்களில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகளும் நடந்து வருகிறது.

மரப்பாலம் சந்திப்பிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்பாலம் கட்ட திட்டம் உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, அவை சுமந்து செல்லும் சுமையின் எடை குறித்த ஆய்வுகள் தற்போது நடந்து வருகிறது.

நவீன கருவி மூலம்...

இதற்காக பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தினர் மரப்பாலம் சந்திப்பு அருகே கடலூர் சாலையில் நவீன கருவி (அட்ஜெல் லோடர்) மூலம் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்களின் எடை குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

தற்போது அதிகபட்சமாக சுமார் 20 முதல் 30 டன் எடை வரை வாகனங்கள் சுமை ஏற்றி செல்வது தெரியவந்துள்ளது. இவ்வளவு எடையுடன் வாகனம் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் வகையில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story