சட்டசபையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்


சட்டசபையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
x

பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் சட்டசபையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி

சட்டசபைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வருகின்றனர். போலீசார் மற்றும் சபை காவலர்கள் விசாரித்து அவர்களை சபை வளாகத்திற்குள் அனுமதிப்பார்கள்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் விவசாயி குடும்பத்தினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சட்டசபைக்கு வருபவர்களை உரிய சோதனை நடத்தி அனுமதிக்குமாறும், தேவையில்லாத நபர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் போலீசாருக்கும், சட்டசபை காவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து புதுச்சேரி ஐ.ஆர்.பி.என். உதவி கமாண்டன்ட் செந்தில்முருகன் சட்டசபை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நவீன கேமராக்கள்

இந்தநிலையில் சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் விதமாக சட்டசபை வளாகம் முழுவதும் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சட்டப்பேரவை செயலகம் சார்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டன. தற்போது அந்த கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சட்டசபை நுழைவாயில், வெளியே செல்லும் வழி, அமைச்சக அலுவலகம், எம்.எல்.ஏ.க்கள் அறை இருக்கும் கட்டிடம், சட்டசபை கூடத்தை சுற்றியுள்ள பகுதிகள் என வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


Next Story