மகளிர் மேம்பாட்டு கழக ரூ.3 கோடி சொத்து மீட்பு


மகளிர் மேம்பாட்டு கழக ரூ.3 கோடி சொத்து மீட்பு
x
தினத்தந்தி 26 July 2023 5:20 PM GMT (Updated: 26 July 2023 5:21 PM GMT)

ரூ.3 கோடி மதிப்புள்ள மகளிர் மேம்பாட்டு கழக சொத்து ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. அங்கு கட்டப்பட்டிருந்த கடைகளும் இடித்து அகற்றப்பட்டன.

புதுச்சேரி

ரூ.3 கோடி மதிப்புள்ள மகளிர் மேம்பாட்டு கழக சொத்து ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. அங்கு கட்டப்பட்டிருந்த கடைகளும் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

புதுவை சாரம் வெங்கடேஸ்வரா நகரில் மகளிர் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான 1,450 சதுர மீட்டர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அந்த இடத்தை அரசு கையகப்படுத்தியிருந்தது.

இதனிடையே அதே பகுதியை சேர்ந்த நாகமணி என்பவர் தங்களது முன்னோர்கள் அந்த இடத்தினை குத்தகைக்கு எடுத்ததாக கூறி சுமார் 3-ல் 2 பங்கு இடத்தை ஆக்கிரமித்தார். அந்த இடத்தில் காம்பவுண்டு அமைத்து 2 கடைகளையும் கட்டினார்.

ரூ.3 கோடி மதிப்பு

அந்த இடத்தை மீட்கும் விதமாக மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு, நிலம் மகளிர் மேம்பாட்டு கழத்துக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. மேலும் அதை மீட்டு கொடுக்கவும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தாசில்தார் ராஜேஷ் கண்ணா, மகளிர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் சாந்தி முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும் அங்கு கட்டப்பட்டிருந்த கடைகளும் இடித்து அகற்றப்பட்டன. இந்த நிலத்தின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு சுமார் ரூ.3 கோடி ஆகும்.


Next Story