

புதுடெல்லி
நம் நாட்டில், நடப்பு சந்தை பருவத்தில் (2019 அக்டோபர்-2020 செப்டம்பர்), ஜனவரி இறுதி நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி 24 சதவீதம் சரிவடைந்து 1.41 கோடி டன்னாக குறைந்துள்ளது என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) தெரிவித்து இருக்கிறது.
பிரேசில் முதலிடம்
உலக அளவில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் நாடு முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. நம் நாட்டில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த 3 மாநிலங்களின் பங்கு மட்டும் 70 சதவீதமாக உள்ளது.
நம் நாட்டில், அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலம் சர்க்கரை சந்தைப் பருவமாகும். 2013-14 பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 2.83 கோடி டன்னாக இருந்தது. 2015-16 பருவத்தில் அது 2.51 கோடி டன்னாக குறைந்தது. 2016-17 பருவத்தில் 2.03 கோடி டன்னாக சரிவடைந்தது. ஆனால் 2017-18 பருவத்தில் புதிய சாதனை அளவை எட்டி 3.25 கோடி டன்னாக அதிகரித்தது. 2018-19 பருவத்தில் 2 சதவீதம் அதிகரித்து 3.31 கோடி டன்னை எட்டி இருக்கிறது.
உற்பத்தி மதிப்பீடுகள்
நடப்பு 2019-20 பருவத்திற்கான (அக்டோபர்-செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி குறித்து மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன. இப்பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 21.5 சதவீதம் குறைந்து 2.60 கோடி டன்னாக சரிவடையும் என இஸ்மா முன்னறிவிப்பு செய்துள்ளது. விஸ்மா எனப்படும் மேற்கு இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் 2.70 கோடி டன்னாக குறையும் என மதிப்பீடு செய்து இருக்கிறது. இது கடந்த பருவத்துடன் ஒப்பிடும்போது 18.45 சதவீத சரிவாகும்.
இந்த நிலையில், நடப்பு பருவத்தில், ஜனவரி 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் மொத்தம் 1.41 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகி உள்ளதாக இஸ்மா தெரிவித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது 1.85 கோடி டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 24 சதவீதம் குறைந்துள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்க்கரை உற்பத்தி கடுமையாக சரிவடைந்து இருப்பதாக தெரிகிறது. அம்மாநிலத்தில் உற்பத்தி 52 சதவீதம் குறைந்து (71 லட்சம் டன்னில் இருந்து) 34 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் உற்பத்தி 20 சதவீதம் குறைந்து 27 லட்சம் டன்னாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது 34 லட்சம் டன்னாக இருந்தது. அதே சமயம் உத்தரபிரதேசத்தில் உற்பத்தி (52 லட்சம் டன்னில் இருந்து) 54 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதி நிலவரம்
கடந்த பருவத்தில் (2018 அக்டோபர்-2019 செப்டம்பர்) இந்திய ஆலைகளுக்கு 50 லட்சம் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்தப் பருவத்தில் 37 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே ஏற்றுமதி ஆகி இருப்பதாக தெரிகிறது.
வங்காளதேசம், இலங்கை, சோமாலியா, ஈரான் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சர்க்கரை இறக்குமதி செய்து வருகின்றன. நடப்பு 2019-20 பருவத்தில் 60 லட்சம் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய இந்திய ஆலைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.