லாரியில் ஏ.சி வசதியுடன் "நடமாடும் திருமண மண்டபம்" - தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பாராட்டு!

லாரியை 200 பேர் பங்கேற்கும் மினி திருமண மண்டபமாக மாற்றியிருப்பதை ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார்.
Published on

சென்னை,

லாரியை திருமண மண்டபம் ஆக மாற்றி வடிவமைத்துள்ள வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பராட்டியுள்ளார் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.

அந்த வீடியோவில், கனரக பொருட்களை ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரியை திருமண மண்டபம் ஆக மாற்றியுள்ளனர்.

40 அடி நீளமுள்ள லாரியில் மடக்கி வைத்து பயன்படுத்தக்கூடிய கூடார அமைப்புகள் உள்ளன. தேவைப்படும் போது அவற்றை விரித்தால், மொத்தம் 1200 சதுர அடி பரப்பில் ஒரு திருமண மண்டபம் ஆக பயன்படுத்தும் அளவுக்கு அந்த லாரி உள்ளது.

இங்கு சுமார் 200 பேர் வரை அமரலாம். லாரியில் குளிர்சாதன வசதிக்காக 2 ஏ.சிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இது குறித்து ஆனந்த் மகிந்திரா கூறுகையில்:-

இதை உருவாக்கி வடிவமைத்து அதன் பின்னணியில் உள்ள நபரை நான் சந்திக்க விரும்புகிறேன்.

இந்த வடிவமைப்பு தொலைதூரப் பகுதிகளுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உள்ளது. மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாட்டில் நிரந்தரமாக இதற்கென ஒரு இடம் தேவையில்லை.

இது சிறந்த படைப்பாற்றல் மிக்க சிந்தனைமிக்க ஒன்று.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com