

விலங்குலகின் ஆகச்சிறந்த மாரத்தான் பந்தய வீரனாக கருதப்படும் ஆர்டிக் ஆலா என்ற கடற்பறவை பற்றிய புதிய மற்றும் அதிர வைக்கும் ஆராய்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு எறும்பு தின்னியின் எடையை விட குறைவான எடை கொண்ட இந்த சிறிய பறவை, தன் வாழ்நாளில் நிகழ்த்தும் சாதனைகள் விஞ்ஞைனிகளையே தலைசுற்ற வைப்பதாக உள்ளன.
ஒரு பறவை எப்படி தரையிறங்காமல் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பறக்க முடியும்? அது எப்போது தூங்கும்?" என்ற மனிதர்களின் நீண்ட நாள் கேள்விக்கு, சர்வதேச பறவையியல் ஆய்வாளர்கள் அண்மையில் விடை கண்டுள்ளனர். இந்த ஆர்டிக் ஆலா பறவைகள் தங்களது நீண்ட தூர பயணத்தின்போது, சிறகுகளை அடிக்காமல் காற்றில் மிதந்து செல்லும் திறனை பெற்றுள்ளன.
அப்படி காற்றில் மிதக்கும் நொடிகளிலேயே, அவை தங்களது மூளையின் ஒரு பகுதியை மட்டும் தூங்க வைத்துவிட்டு, மறுபகுதியை விழிப்புடன் வைத்திருக்கும் அசாத்திய ஆற்றலை பயன்படுத்தி கொள்கின்றன. காற்றில் கண் இமைக்கும் நேரத்தில் குட்டி தூக்கம் போடும் இந்த வித்தையே, இவை டயர்ட் ஆகாமல் பல மாதங்கள் கடலில் பறக்க முக்கிய காரணமாகும்.
இந்த ஆர்டிக் ஆலா பறவைகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 15 முதல் 30 ஆண்டுகள் ஆகும். ஒரு பறவை தனது வாழ்நாளில் ஒட்டுமொத்தமாக பறக்கும் தூரத்தை கணக்கிட்ட ஆராய்ச்சியாளர்கள் வாயடைத்து போயுள்ளனர். இது தனது வாழ்நாளில் பயணிக்கும் மொத்த தூரமானது, பூமியில் இருந்து நிலவுக்கு சென்று 3 முறை திரும்பி வருவதற்கு சமம் சுமார் 24 லட்சம் கிலோமீட்டர் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
பார்க்க மிகவும் அழகாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கும் இந்த ஆர்டிக் ஆலாக்கள், தங்களது முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாப்பதில் மிக கொடூரமானவை. தங்களது இருப்பிட எல்லைக்குள் அத்துமீறி நுழையும் துருவ கரடிகள் மற்றும் பிற பெரிய விலங்குகளை கூட, தங்களது கூர்மையான அலகுகளால் குத்தி கிழித்து விரட்டும் முரட்டுத்தனமான தைரியம் கொண்டவை.
இவ்வளவு அசாத்திய திறன்களைக் கொண்ட இந்த ஆர்டிக் ஆலா பறவை இனம், தற்போதைய பருவநிலை மாற்றம் காரணமாக 'அழிந்து வரும் அபாயகரமான' நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உலக இயற்கை பாதுகாப்பு சங்கம் தனது சிவப்பு பட்டியலில் கவலையுடன் எச்சரித்துள்ளது.