40 வயதை கடந்தவரா? உங்களுக்காக மருத்துவம் கூறும் அறிவுரை

ஒருநாள் அந்த அடைப்பு முழுமையானால் அதுவே மாரடைப்பாக மாறுகிறது.
40 வயதை கடந்தவரா? உங்களுக்காக மருத்துவம் கூறும் அறிவுரை
Published on

நேற்றுவரை நன்றாகத்தான் இருந்தார்... இன்று திடீரென்று மாரடைப்பு!" என்ற செய்தியை நாம் அடிக்கடி கேட்கிறோம். குறிப்பாக 40 வயதுக்கு மேல் இருப்பவர்களிடம் இதய நோய்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம். ஆனால், ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாரடைப்பு திடீரென்று வருவதில்லை; அது பல ஆண்டுகளாக நாம் செய்த சிறு சிறு தவறுகளின் மொத்தக் கணக்குதான்.

காலை உணவைத் தவிர்ப்பது, எண்ணெயில் பொரித்த உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது. உடற்பயிற்சியே இல்லாமல் நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல், மனஅழுத்தம், தூக்கமின்மை, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால்... இவை அனைத்தும் சேர்ந்து, இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களை மெதுவாக அடைக்கத் தொடங்குகின்றன. வெளியில் எந்த அறிகுறியும் தெரியாமல் உள்ளே பிரச்சினை வளர்கிறது. ஒருநாள் அந்த அடைப்பு முழுமையானால் அதுவே மாரடைப்பாக மாறுகிறது.

இதயத்தைப் பாதுகாப்பது

நல்ல செய்தி என்னவென்றால், இதயத்தைப் பாதுகாப்பது கடினமான விஷயம் அல்ல. தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். வீட்டில் சமைத்த எளிய உணவைச் சாப் பிட வேண்டும். காய்கறி, பழம், கீரை ஆகியவற்றை அதிகப்படுத்தி, எண்ணெய், இனிப்பு, உப்பு ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகைப்பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும். போதுமான தூக்கம் அவசியம். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்துதான்.

40 வயதைக் கடந்த பிறகு

40 வயதைக் கடந்த பிறகு, ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றைப் பரிசோதித்துக்கொள்வது நல்ல பழக்கமாக இருக்க வேண்டும். “எனக்கு ஒன்றும் ஆகாது" என்ற நம்பிக்கையைவிட, "நான் என்னை பாதுகாத்துக்கொள்வேன்" என்ற விழிப்புணர்வே உயிரைக் காப்பாற்றும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com