குழந்தைகளும் மின்னணுத் திரைகளும்

குழந்தைகளும் மின்னணுத் திரைகளும்

குழந்தைகளை டி.வி. அல்லது மின்னணுத் திரைகளை வெகுநேரம் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது
Published on

இரண்டு வயது கூட நிறைவடையாத குழந்தைகளை எவ்வித உடல் அசைவும் இன்றி வெகுநேரம் கணினி விளையாட்டுகள் போன்றவற்றில் செலவிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் கூறுகிறது.

அதே சமயத்தில், இரண்டிலிருந்து நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே மின்னணுத் திரைகளில் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பெரும்பாலான நாடுகளில், குழந்தைகள் உறங்கச் செல்வதற்கு சில மணிநேரத்துக்கு முன்பிருந்தே மின்னணுத் திரைகளை அவர்களுக்குக் காண்பிக்கக் கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறதே தவிர, இதுவரை வரையறுக்கப்பட்ட நேரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

குழந்தைகளின் குறும்புத்தனத்தை கட்டுப்படுத்த முடியாத பெற்றோர்கள், அவர்களை டி.வி., செல்போன் மின்னணுத் திரைகளை அதிக நேரம் பார்க்க அனுமதிப்பது, அவர்களின் அறிவு வளர்ச்சியை மட்டுப்படுத்துவதுடன், பிற்காலத்தில் உடல் பருமன் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

குழந்தைகளின் உடல் ரீதியான செயல்பாடு, நடத்தை மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான தூக்கம் ஆகியவை பற்றி உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்களை வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

மின்னணுத் திரைகளைப் போல, குழந்தைகள் கார் இருக்கை, நாற்காலி போன்றவற்றில் அதிகபட்சம் ஒரு மணிநேரத்துக்கு மேல் செலவிடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com