நான்கு நிதி ஆண்டுகளில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 23% உயர்ந்தது

நான்கு நிதி ஆண்டுகளில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 23 சதவீதம் உயர்ந்து 56.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
நான்கு நிதி ஆண்டுகளில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 23% உயர்ந்தது
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

கோல் இந்தியா

உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பிரதான எரிபொருளாக இருந்து வருகிறது. உள்நாட்டு தேவையை ஈடு செய்யும் வகையில் இந்த மின் நிலையங்கள் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முயற்சி செய்து வரும் நிலையில் நிலக்கரிக்கான தேவைப்பாடு மிக அதிகமாக இருக்கிறது.

2016-17-ஆம் நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் 55.40 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது. சென்ற நிதி ஆண்டில் (2017-18) இந்நிறுவனம் 60 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் 56.70 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்தது. எனினும் முந்தைய ஆண்டை விட உற்பத்தி 2.35 சதவீதம் அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில், 2013-14 முதல் 2017-18 வரையிலான 4 நிதி ஆண்டுகளில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 56.74 கோடி டன்னை எட்டி உள்ளது. 2013-14-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது இதன் உற்பத்தி 46.24 கோடி டன்னாக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) கோல் இந்தியா நிறுவனம் 63 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. 2025-26-ஆம் ஆண்டில் தனது நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உயர்தர நிலக்கரி

நம் நாட்டில் 2022-ஆம் ஆண்டு முடிய கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரிக்கான தேவைப்பாடு ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சாதாரண நிலக்கரி இறக்குமதி தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com