ஒப்புதல் இல்லாமல் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது தீங்கு விளைவிக்கும்;சட்டவிரோதமானது- மத்திய அரசு எச்சரிக்கை

ஒப்புதல் இல்லாமல் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது 'தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்டவிரோதமானது' இன்னும் சோதனை நிலையில் தான் உள்ளது என்று மத்திய அரசு கூறி உள்ளது.
ஒப்புதல் இல்லாமல் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது தீங்கு விளைவிக்கும்;சட்டவிரோதமானது- மத்திய அரசு எச்சரிக்கை
Published on

புதுடெல்லி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவில் காட்டுத்தீ போல் தொடர்ந்து பரவி வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்த அவர்களின் அனைத்து முயற்சிகளையும் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்தது. டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதன்மூலம் டெல்லியில் 4 நோயாளிகளின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்பட்டது.

இன்று சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:-

பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது, இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனைப் ஆய்வு செய்ய ஐ.சி.எம்.ஆர் தொடங்கிய தேசிய அளவிலான ஆய்வு நடக்கிறது.

ஐ.சி.எம்.ஆர் தனது ஆய்வை முடிக்கும் வரை ஒரு வலுவான அறிவியல் சான்று கிடைக்கும் வரை, பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சி அல்லது சோதனை நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சரியான வழிகாட்டுதலின் கீழ் பிளாஸ்மா சிகிச்சையை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.

பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. இது இன்னும் சோதனை நிலையில் உள்ளது, இப்போது ஐ.சி.எம்.ஆர் கூட இந்த சிகிச்சையைப் பற்றிய கூடுதல் புரிதலை அடையாளம் காணவும் செய்யவும் ஒரு பரிசோதனையாகச் செய்து வருகிறது. இது அங்கீகரிக்கப்படும் வரை யாரும் அதைப் பயன்படுத்தக்கூடாது, இது நோயாளிக்கும் தீங்கு விளைவிக்கும் மேலும் சட்டவிரோதமாகும் என கூறினார்.

பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?

மனித ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என 3 வகையான அணுக்கள் உள்ளன. இதுபோக திரவநிலையில் பிளாஸ்மா உள்ளது. ரத்தத்தில் சுமார் 55 சதவீத அளவுக்கு இருக்கும் பிளாஸ்மா ஊட்டச்சத்துக்கள் தண்ணீர், வைட்டமின்கள், தாது பொருள்கள், புரத பொருட்கள், ஹார்மோன்கள் மற்றும் ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய பிற காரணிகளை கொண்டிருக்கிறது. உடல் இயக்கவியலில் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு மிகவும் முக்கியமான பங்கு இருக்கிறது. ரத்தத்திலிருக்கும் அனைத்து கூறுகளையும் திரவமாக உடல் முழுவதும் சுமந்து செல்கிறது.

அதுபோக, செல்கள் வெளியேற்றும் கழிவு பொருட்களையும் சுமந்து நுரையீரலுக்கு கொண்டு செல்கிறது. அங்கு, நுரையீரல் சுத்திகரித்து ஆக்சிஜனை உடலுக்கு அனுப்புகிறது.

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றிற்கு எதிராக உடலை பாதுகாப்பதில் பிளாஸ்மாவில் உருவாகும் இம்யூனோ குளோபின்கள் மற்றும் எதிர்ப்பு சக்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலுக்குள் படையெடுக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து உடலை பாதுகாப்பதில் இம்யூனோ குளோபின்கள் பாதுகாப்பு கேடயமாக முன் நிற்கிறது. மனிதர்கள் எதிர்கொள்ளும் பல கடுமையான உடல்நல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிளாஸ்மா ஒரு முக்கிய பங்கினை கொண்டிருக்கிறது.

இத்தகையை பிளாஸ்மாவை தொற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தும் நடைமுறை ஏற்கனவே இருந்து வருகிறது. தற்போது முழு ரத்தத்திற்கு பதில், தேவையான பகுதி மட்டும் பிரித்து பயன்பெறும் வசதியுள்ளது. அந்த வகையில் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்படும் பிளேட்லெட் செல்களை 1 வாரம் வரையிலும், சிவப்பு அணுக்களை 3,540 நாட்கள் வரையிலும், பிளாஸ்மா திரவத்தை உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டால் 1 வருடம் வரையிலும் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் பிளாஸ்மாவை பெற்று, அதனை தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சை முறையாகும். குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் இருக்கும் இம்யூனோ குளோபின்கள், தொற்றுநோய் வைரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்று பலமடைந்திருக்கும். அதனை, சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும்போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து குணம் அடைய வாய்ப்பு உள்ளது.

1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவலின் போதும் குணமடைந்தவர்களிடம் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்த மாற்றம் இருந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. அம்மை போன்ற தொற்று நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இதுபோன்ற சிகிச்சை முறையே நடைமுறையில் இருந்தது. கொரோனா வைரசின் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ், மெர்ஸ் வைரஸ் தாக்கத்தின் போதும், எபோலா தொற்றின் போதும் இந்த பழைய முறை சோதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை முறையை அமல்படுத்த சோதனை பணிகள் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com