மறதி நோய் முப்பது வயதிலேயே வருகிறதா? - இளைஞர்களை தாக்கும் "எண்ணிம மறதி" - மருத்துவர்கள் எச்சரிக்கை!

தினமும் ஒரு பக்கம் கையால் எழுதுங்கள்; கையெழுத்து மூளையை தட்டி எழுப்பும்.
மறதி நோய் முப்பது வயதிலேயே வருகிறதா? - இளைஞர்களை தாக்கும் "எண்ணிம மறதி"  - மருத்துவர்கள் எச்சரிக்கை!
இளைஞர்கள்
Published on

சாவியை எங்கே வைத்தோம் என்று தேடுகிறீர்களா? காலையில் பார்த்தவர் பெயர் மாலையில் மறக்கிறதா? பத்து நிமிடத்திற்கு முன் சொன்ன செய்தி நினைவில் இல்லையா? நீங்கள் தனி ஆள் இல்லை! சென்னையில் முப்பது வயதுக்குட்பட்ட பத்து இளைஞர்களில் ஆறு பேருக்கு இதே பிரச்சினை! மருத்துவர்கள் இதற்கு பெயர் வைத்துள்ளனர் - "எண்ணிம மறதி"! ஐம்பது வயதில் வர வேண்டிய மறதி நோய், இருபத்தைந்து வயதில் வருகிறது!

ஏன் இப்படி ஆகிறது?

மூளைக்கு வேலையே இல்லை

முன்பெல்லாம் பத்து பேர் தொலைபேசி எண் மனப்பாடமாக தெரியும்! இப்போது சொந்த வீட்டு எண் கூட நினைவில் இல்லை; எல்லாம் அலைபேசியில்! வழியை நினைவில் வைக்க வேண்டியதில்லை, வரைபடம் இருக்கிறது! கணக்கு போட வேண்டியதில்லை, கணிப்பான் இருக்கிறது! மூளைக்கு வேலை கொடுக்காவிட்டால் துருப்பிடித்துவிடும்.

ஒரே நேரத்தில் பல வேலை

அலைபேசியில் பாடல் கேட்டுக்கொண்டே, குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே, உணவு உண்பது தவறு. மூளை ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் சிறப்பாகச் செய்யும். ஐந்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்தால், எதுவும் மனதில் பதியாது.

ஆழ்ந்த உறக்கம் இல்லை

இரவு பன்னிரண்டு மணி வரை அலைபேசி வெளிச்சத்தை பார்த்தால், மூளை உறங்காது! மூளை பகலில் கற்றதை இரவில்தான் சேமித்து வைக்கும்; நீங்கள் உறங்காவிட்டால் சேமிப்பு நடக்காது. முன்பெல்லாம் கடை பட்டியலை மனதில் வைத்து பொருள் வாங்குவோம்; இப்போது படம் எடுத்துவிடுகிறோம், மூளையைப் பயன்படுத்துவதே இல்லை. எப்போதும் பதற்றம், பயம், அவசரம் ஆகிய மனநிலைகளில் மூளை புதிய செய்திகளைச் சேமிக்காது.

இதனால் என்ன ஆகும்?

தேர்வில் படித்தது மறந்து போகும், அலுவலகத்தில் முக்கிய கோப்பை மறந்து விடுவீர்கள், உறவினர் பெயர் கூட நினைவில் இருக்காது, நீண்ட நாளில் மன நலம் பாதிக்கும்.

மீள்வது எப்படி?

தினமும் இரண்டு தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்யுங்கள்; இது மூளைக்கு சிறந்த உடற்பயிற்சி! உணவு உண்ணும்போது அலைபேசி வேண்டாம்; பேசும்போது மட்டும் பேசுங்கள். படுக்கையறைக்கு அலைபேசி வேண்டாம்; பழைய பாணி கடிகாரத்தைப் பயன்படுத்துங்கள். தினமும் ஒரு பக்கம் கையால் எழுதுங்கள்; கையெழுத்து மூளையை தட்டி எழுப்பும். இரவு பதினொன்றுக்குள் உறங்கி, காலை ஆறு மணிக்கு எழுங்கள். நாள்தோறும் இருபது பக்கங்கள் புத்தகம் படித்தால், நினைவாற்றல் இரண்டு மடங்காகும்.

நினைவில் வையுங்கள்! அலைபேசி அறிவாளி ஆக ஆக, நீங்கள் மறதிக்காரர் ஆகிறீர்கள்! அலைபேசியை குறையுங்கள், நினைவாற்றலை வளருங்கள்!

X

Daily Thanthi
www.dailythanthi.com