அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 7.1% அதிகரிப்பு

நடப்பு நிதி ஆண்டில், பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 7.1 சதவீதம் அதிகரித்து 44 கோடி டன்னாக இருக்கிறது.
அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 7.1% அதிகரிப்பு
Published on

கோல் இந்தியா முதலிடம்

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் முதல் இரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. அதே சமயம் உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

அனல்மின் நிலையங்களில் நிலக்கரிதான் பிரதான எரிபொருளாக இருந்து வருகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களுமாக 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டிற்குள் தனது நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்-பிப்ரவரி) கோல் இந்தியா நிறுவனம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மொத்தம் 44 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 7.1 சதவீதம் அதிகமாகும். அப்போது சப்ளை 41 கோடி டன்னாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில், கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 52.77 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 49.51 கோடி டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 6.6 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

மதிப்பீடு

நம் நாட்டில் 29,900 கோடி டன் அளவிற்கு நிலக்கரி வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 12,300 கோடி டன்னை உற்பத்தி செய்து, உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலக்கரி வளம் 100 ஆண்டுகளுக்கு போதுமானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com