

ஆனால் உடல் என்ற இந்த உயிர் இயந்திரம் செய்யும் அற்புதங்களை நாம் நினைப்பதும் இல்லை. ரசிப்பதும் இல்லை. இருந்தாலும் அறிவியல்பூர்வமாக அந்த அதிசய உண்மைகளை நாம் உணரும்போது ஒரு கணமேனும் சிலிர்ப்பும், மலைப்பும் நமக்கு ஏற்படவே செய்யும்.
* சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தங்கள் ஆயுட்காலத்தில் 30 ஆயிரம் கிலோ எடை கொண்ட உணவினை உட்கொள்கிறார்கள்.
* இதயம் ஒரு வருடம் 43 லட்சம் தடவை துடிக்கிறது.
* உடலுக்குள் ரத்தம் தினமும் 16 கோடியே 80 லட்சம் மைல் தூர அளவுக்கு சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது.
... இதுபோல் ஏராளமான பிரமிக்கத்தக்க பணிகளை ஒவ்வொரு வினாடியும் நமது உடல் செய்துகொண்டே இருக்கிறது. இந்த உயிர் இயந்திரத்தின் இயக்கத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அதை நிவர்த்தி செய்யும் விதத்தில் நமது உடல் செயல்படுவது இன்னொரு புதுமையாகும்.
இந்த உயிர் இயந்திரத்தின் இயக்கத்தில் நெருக்கடி தோன்றும்போது, அது பல்வேறு நோய்களாக வெளிப்படுத்தப்படுகிறது. இயக்கத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பதை உடல் நோய் அறிகுறிகளாக வெளிப்படுத்துகிறது. அப்போதுதான் சராசரி மனிதன், நோயாளி என்ற நிலையில் டாக்டரைத் தேடி வருகிறார். அப்போது அவருக்கு நோய் ஏற்பட என்ன காரணம்? அது எப்படி அவரது உடல் இயக்கத்தில் பிரச்சினைகள் ஏற்படுத்துகிறது? மீண்டும் உடல் சரியான இயக்கநிலைக்கு வர என்ன தீர்வு? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதற்கு டாக்டர்களும், அவர்கள் வழங்கும் சிகிச்சைகளும் பதிலாய் அமைகிறது.
நமது உடல் பல பாகங்களை கொண்டது. அவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு இயங்குவது இந்த உயிர் இயந்திரத்தின் சிறப்பம்சம். உடலுக்குள் ரத்தம் தினமும் பல கோடி மைல் தூரம் பயணிக்கிறது என்று மேலே பார்த்தோம் அல்லவா! இந்த ரத்தம் - உடலின் போக்குவரத்து சிஸ்டமாகவும், நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாகவும் இருக்கிறது. செல்களுக்கு தேவையான ஆக்சிஜன், தண்ணீர், உணவு போன்றவைகளை ரத்தம்தான் சரியான நேரத்திற்கு சிறப்பாக கொண்டு போய் சேர்க்கிறது. அது மட்டுமின்றி செல்களின் பல்வேறு செயல்பாடுகளால் உருவாகும் கழிவுகள், அதற்குரிய இடங்களில் போய் சேரவும் ரத்தம்தான் துணைபுரிகிறது. அதற்காகதான் ரத்தம் தினமும் உடலுக்குள் அவ்வளவு தூரம் பயணப்பட வேண்டியிருக்கிறது.
ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபினின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதுதான், ஆக்சிஜனை சுவாச கட்டமைப்புகளில் இருந்து பெற்று, செல்களில் கொண்டுபோய் சேர்க்கிறது. அங்கிருந்து கார்பன் டை ஆக்சைடை மீண்டும் சுவாச கட்டமைப்புகளுக்கு கொண்டு சேர்த்து, உடல் இயக்க நிலையை சீராக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வெள்ளை ரத்த அணுக்கள், ரத்தம் கெட்டியாக துணைபுரியும் பிளாஸ்மா போன்றவைகளும் ரத்தத்தில்தான் இருக்கின்றன.
இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டிலும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. தொடர்ச்சியாக மனித இனம் உருவாகிக் கொண்டே இருக்க இனப்பெருக்க உறுப்புகளும், அதன் செயல்பாடுகளும்தான் காரணம். ஆண் இனப்பெருக்க உறுப்பிற்கும், பெண் இனப்பெருக்க உறுப்பிற்கும் வித்தியாசங்கள் இருந்தாலும், இரண்டும் இணைந்து உருவாக்கம் நிகழ்த்தும் விதத்தில் அவை அற்புதமாக படைக்கப்பட்டிருக்கின்றன. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான், ஆணின் விரைகளில் செயல்பட்டு உயிரணுவை உற்பத்தி செய்கிறது. ஒரு மில்லி விந்துவில் ஒன்றரை கோடி உயிரணுக்கள் இருக்கும். பெண்ணை கருத்தரிக்க வைக்க அதில் ஒன்றே ஒன்று போதுமானது.
பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள்தான், மனித உற்பத்திக் கேந்திரம். பெண்ணுறுப்பு, கருப்பை, சினைப்பைகள், கருக்குழாய்கள் போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. பெண்ணுறுப்பு கிட்டத்தட்ட பத்து செ.மீ. நீளம் கொண்ட ஒரு குழல்போன்ற அமைப்பு. அதன் முகப்பு பகுதி கன்னிச்சவ்வு மூலம் மூடப்பட்டிருக்கும். அதன் நடுவில் உள்ள சிறிய துவாரத்தின் வழியாகத்தான் மாதவிலக்கு உதிரம் வெளியேறுகிறது. உறவின்போது ஆணின் உயிரணுவை, யோனி நாளம் வரவேற்கிறது. பெண்ணுறுப்புக்கு பார்தோலின் என்ற சுரப்பி சுரக்கும் திரவம் வழுவழுப்புத்தன்மையை உருவாக்குகிறது.
எட்டு செ.மீ. நீளமும், ஐந்து செ.மீ. அகலமும் கொண்ட தசையாலானதுதான் கருப்பை. இனப்பெருக்கத்தில் இது செய்யும் பணி அதிசயமானது. 80 கிராம் எடை கொண்ட கருப்பை, கருவை உள்வாங்கி, அதைவிட பலமடங்கு கொண்ட குழந்தையாக வளர்த்தெடுக்கிறது. ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் சந்தித்து, கருக்குழாயில் கருவாகிறது. அந்த கரு, கருப்பைக்குள் சென்று பதியமாகி சிசுவாகி, குழந்தையாக வளருகிறது. கருப்பையின் மேல் பகுதியில், இருபுறமும் இரு சினைப்பைகள் உள்ளன. இதில் இருந்துதான் மாதந்தோறும் சினை முட்டை வெளிவருகிறது. பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் பேலாப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாயின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. முடியைவிட மெலிதாக இருக்கும் இந்த குழாய்கள்தான் சினை முட்டையையும், உயிரணுவையும் சந்திக்க வைக்கவும் - கருவாக்கி - அதனை கருப்பைக்குள் அனுப்பும் பணியையும் செய்கின்றன. இதன் பணிகள் அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன.
பெண் பூப்படைவதன் மூலம் அவள் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிட்டாள் என்பது உணர்த்தப்படுகிறது. பெண்ணின் ஒவ்வொரு மாதவிலக்கு சுழற்சி காலத்திலும் சினை முட்டை முதிர்ந்து வெடித்து வெளியே வருகிறது. அது ஆணின் உயிரணுவோடு சேர்ந்து கருவாகும் சூழல் உருவாகிறது. சினைமுட்டை வெளியேறும் ஒவ்வொரு மாதமும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஆகிய ஹார்மோன்கள் கருப்பைக்குள் என்டோமெட்ரியம் என்ற பஞ்சுப்பொதி போன்ற மென் பொருளை உருவாக்குகிறது. கருப்பைக்குள் வரும் கரு வளர படுக்கை அமைத்துக்கொடுப்பது போன்ற பணியை என்டோமெட்ரியம் செய்யும். ஆனால் ஆணும், பெண்ணும் இணையாவிட்டால் கருத்தரிப்பு அங்கே நிகழாது. அதனால் என்டோமெட்ரியத்திற்கு அங்கே வேலைஇல்லை. அதனால் அது ரத்தத்தோடு மாதந்தோறும் வெளியேறும். அப்படி வெளியேற்றப்படுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம்.
முன்பைவிட இப்போது சீக்கிரமே சிறுமிகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். 9 முதல் 11 வயதுக்குள் பூப்படைகிறார்கள். ஆனால் 16 வயது ஆகியும் பூப்படையாவிட்டால் கவனிக்க வேண்டும். உடல் வளர்ச்சி குறைபாடு கொண்ட சிறுமிகளும், சத்துணவு குறைபாடு கொண்ட சிறுமிகளும் பூப்படைவது தாமதமாகும். ஆனால் 17, 18 வயதாகியும் பூப்படையாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். பிறவியிலே கருப்பை இல்லாமை, கருப்பை மற்றும் இதர இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியடையாமல் இருத்தல், பெண் உறுப்பு அடைபட்டு போயிருத்தல் போன்ற பல காரணங்களால் பூப்படையாத நிலை ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் மாதவிலக்கு தோன்றாது. பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம், சினைப்பை கட்டி, சிஸ்ட் போன்றவைகள் இருந்தால் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மையாலும் மாதவிலக்கு தோன்றாது. ஹார்மோன் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கும் மாதவிலக்கு வராத நிலை ஏற்படும். கருப்பையும், சினைப்பைகளும் சரியாக வளராதவர்களுக்கும் மாதவிலக்கு தோன்றாது.