சீரான முதலீட்டு திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.8,055 கோடி

மார்ச் மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.8,055 கோடி
சீரான முதலீட்டு திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.8,055 கோடி
Published on

புதுடெல்லி

2025-ஆம் ஆண்டிற்குள் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஏறக்குறைய 4 மடங்கு உயர்ந்து ரூ.94 லட்சம் கோடியை எட்டும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது..

மார்ச் மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் (எஸ்.ஐ.பி) ரூ.8,055 கோடி முதலீட்டை ஈர்த்து இருக்கின்றன.

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

பிப்ரவரி மாதத்தில்...

பிப்ரவரி மாதத்தில் இத்துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.16 லட்சம் கோடியாக குறைந்தது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது அது 0.89 சதவீத சரிவாக இருந்தது. மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.23.79 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இத்துறையின் சொத்து மதிப்பு 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

2025-ஆம் ஆண்டிற்குள் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஏறக்குறைய 4 மடங்கு உயர்ந்து ரூ.94 லட்சம் கோடியை எட்டும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது. அப்போது சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என மகிந்திரா ஏ.எம்.சி. நிறுவனம் கூறி இருக்கிறது.

முதலீட்டாளர்கள் ஆர்வம்

பரஸ்பர நிதி நிறுவனங்களின் பெரும்பாலான திட்டங்கள் அதிக முதலீட்டை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக அண்மைக் காலத்தில் இத்துறையின் சீரான முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் ரூ.8,022 கோடி முதலீட்டை ஈர்த்து இருந்தது. ஜனவரி மாதத்தில் அது ரூ.8,064 கோடியாக உயர்ந்தது. பிப்ரவரி மாதத்தில் ரூ.8,095 கோடியாக மேலும் இருந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இத்திட்டங்களில் ரூ.8,055 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 13 சதவீத வளர்ச்சியாகும்.

பங்குசார்ந்த திட்டங்கள்

மார்ச் மாதத்தில் பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் (ஈ.எல்.எஸ்.எஸ். எனப்படும் பங்குசார்ந்த சேமிப்புத் திட்டங்கள் உள்பட) ரூ.11,756 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது. முந்தைய பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது இரண்டு மடங்கிற்கு மேல் அதிகமாகும். பங்குச்சந்தைகள் ஏற்றநிலைக்கு திரும்பியதால் பரஸ்பர நிதி துறையின் இத்திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

புதுடெல்லி (என்.சி.ஆர். உள்பட), மும்பை (தானே, நவி மும்பை உள்பட), கொல்கத்தா உள்ளிட்ட 15 நகரங்கள் அல்லாத சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பரஸ்பர நிதி துறையினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பலனாக இத்துறையின் எஸ்.ஐ.பி. திட்டங்களில் சிறிய, நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.

தேர்ச்சி, அனுபவம்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com