நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில், பயணிகள் வாகனங்கள் விற்பனையில் மாருதி சுசுகி சந்தைப்பங்கு குறைந்தது மகிந்திராவின் பங்கு அதிகரித்தது

நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஆகஸ்டு) பயணிகள் வாகனங்கள் விற்பனையில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் சந்தைப்பங்கு குறைந்துள்ளது.
நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில், பயணிகள் வாகனங்கள் விற்பனையில் மாருதி சுசுகி சந்தைப்பங்கு குறைந்தது மகிந்திராவின் பங்கு அதிகரித்தது
Published on

அதே சமயம் மகிந்திரா அண்டு மகிந்திராவின் பங்கு அதிகரித்து இருக்கிறது.

கார்கள் விற்பனை

இந்தியாவின் நம்பர் 1 கார் நிறுவனமான மாருதி சுசுகி, ஆகஸ்டு வரையிலான 5 மாதங்களில் மொத்தம் 5,55,064 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 7,57,289-ஆக இருந்தது. ஆக, விற்பனை 27 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனையடுத்து அதன் சந்தைப் பங்களிப்பு 2 சதவீதத்திற்கு மேல் குறைந்து 49.83 சதவீதமாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 52.16 சதவீதமாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் மொத்தம் 89,733 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் அது 1,00,015-ஆக இருந்தது. ஆக, விற்பனை 10 சதவீதம் குறைந்து இருக்கிறது. இந்நிலையில், அதன் சந்தைப்பங்கு 1.19 சதவீதம் உயர்ந்து 8.08 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 6.89 சதவீதமாக இருந்தது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் மொத்தம் 60,093 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 98,702-ஆக இருந்தது. ஆக, விற்பனை 39 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனையடுத்து அதன் சந்தைப் பங்களிப்பு (6.79 சதவீதத்தில் இருந்து) 1.39 சதவீதம் சரிந்து 5.40 சதவீதமாக குறைந்துள்ளது.

பங்கு விலை நிலவரம்

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது மாருதி சுசுகி நிறுவனப் பங்கு 4.39 சதவீதம் குறைந்து ரூ.6,130.65-க்கு கைமாறியது. மகிந்திரா அண்டு மகிந்திரா பங்கு 2.48 சதவீதம் இறங்கி ரூ.523.75-ல் நிலைகொண்டது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு 5.13 சதவீதம் சரிவடைந்து ரூ.121.95-க்கு விலைபோனது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com