

ஒரு காலத்தில் மாட்டு வண்டியிலும், சைக்கிளிலும் ராக்கெட் பாகங்களை சுமந்து சென்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இன்று உலக நாடுகளையே அண்ணாந்து பார்க்க வைக்கும் அளவிற்கு விண்வெளி துறையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆரியபட்டா முதல் பி.எஸ்.எல்.வி வரை
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான 'ஆரியபட்டா' 1975 சோவியத் யூனியன் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் விண்வெளி சகாப்தத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது.
இந்தியாவின் சொந்த தயாரிப்பான எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் 1980 ரோகினி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் சொந்தமாக ராக்கெட் தயாரிக்கும் வல்லமை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
இஸ்ரோவின் நம்பகமான குதிரை என்று அழைக்கப்படும் பி.எஸ்.எல்.வி ராக்கெட், நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை துல்லியமாக விண்ணில் நிலைநிறுத்தி, விண்வெளி வர்த்தகத்தில் இந்தியாவின் கொடியை பறக்கவிட்டது.
அண்டை கிரகமான செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், உலகிலேயே முதன்முதலான முயற்சியிலேயே வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைந்து சாதனை படைத்தது. ஒரு ஹாலிவுட் அறிவியல் புனைகதை திரைப்படத்தை எடுக்கும் செலவை விட மிக குறைந்த பட்ஜெட்டில் சுமார் ரூ.450 கோடியில் இந்த திட்டத்தை முடித்து, அமெரிக்காவின் நாசா அமைப்பையே ஆச்சிரியமாக பார்க்க வைத்தது இஸ்ரோ.
நிலவையும் செவ்வாயையும் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த 2023-இல் அனுப்பிய விண்கலம் தான் ஆதித்யா எல்-1. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லக்ராஞ்சியன் பாயிண்ட் 1' என்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, தற்போது சூரியனின் வெப்பம், கதிர்வீச்சு மற்றும் காந்தப்புயல் குறித்த அதிமுக்கிய தரவுகளை துல்லியமாக நமக்கு அனுப்பி வருகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்தது. அமெரிக்கா போன்ற நாடுகள் வியந்து போன இந்த சாதனை மூலம், குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கதவை தட்ட தொடங்கின.
இந்திய மண்ணிலிருந்து, இந்திய விண்கலம் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி, அவர்களை மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வரும் இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனக்கென தனியாக விண்வெளி நிலையத்தை அமைக்க தீவிரமாக வேலை செய்து வருகிறது. மேலும் 2040-க்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்பும் இலக்கோடும் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது.
மாட்டு வண்டியில் தொடங்கிய பயணம் இன்று செவ்வாய், சூரியன் என நீண்டு, ஒட்டுமொத்த உலகையுமே வியப்பின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இஸ்ரோவின் இந்த விண்வெளிப் பயணம், ஒவ்வொரு இந்தியனும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதம் கொள்ள வேண்டிய வரலாற்றுச் சாதனை என்பதில் துளியும் சந்தேகமில்லை!