

பால் என்பது ஊட்டச்சத்துகள் நிறைந்த முக்கியமான உணவுப் பானங்களில் ஒன்று. புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் இதில் இருப்பதால், அன்றாட உணவில் பாலை சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பால் அருந்துவது அனைவருக்கும் ஏற்ற பழக்கமாக இருக்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிலருக்கு இது செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். பாலில் இயற்கையாகவே உள்ள லாக்டோஸ் என்ற சர்க்கரையை சிலரது உடல் முழுமையாக ஜீரணிக்க முடியாது. இதுபோன்றவர்களுக்கு வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிறு உப்புசம், வாயுத் தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாட்டுப் பாலில் இயற்கையான அமிலத் தன்மை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை வெறும் வயிற்றில் அருந்தும்போது சிலருக்கு வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகரித்து, நெஞ்செரிச்சல் அல்லது செரிமானக் கோளாறுகள் தோன்றலாம். மேலும், பாலில் உள்ள கால்சியம், ஜிங்க் மற்றும் இரும்புச் சத்து போன்ற தாதுக்கள், மற்ற சில ஊட்டச்சத்துகள் உடலில் உறிஞ்சப்படுவதை பாதிக்கக்கூடும். இதனால், நீண்டகாலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
மாட்டுப் பாலில் இயற்கையாக காணப்படும் சில ஹார்மோன் கூறுகள், வெறும் வயிற்றில் அருந்தும்போது உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கக்கூடும் என்றும், அதன் மூலம் ஒட்டுமொத்த உடல்நலத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பாலில் கலோரியின் அளவு அதிகமாக இருப்பதால், அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கம் சிலருக்கு கூடுதல் கலோரி சேர்க்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. மாட்டுப் பாலில் உள்ள சில புரதங்கள், அதற்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சருமத்தில் அரிப்பு, தடிப்பு, படை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, பால் ஒவ்வாமை உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நேரங்களில் சூடான பால் குடிப்பது நல்லது என்று பலர் நினைப்பார்கள். ஆனால் சிலருக்கு பால் அருந்துவதால் சுவாசப் பாதையில் சளி உற்பத்தி அதிகரிக்கலாம். குறிப்பாக ஆஸ்துமா அல்லது மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் பால் அருந்துவது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
பால் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் சிறந்த உணவுப் பானம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும், அதை எந்த நேரத்தில் அருந்த வேண்டும் என்பது ஒவ்வொருவரின் உடல்நிலையையும், செரிமானத் திறனையும் பொறுத்து மாறுபடும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் மேற்கண்ட சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. மேலும், உடலுக்கு ஏற்ற காலை உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் குறித்து மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்று பின்பற்றுவது சிறந்ததாகும்.