அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: 21ஆம் ஆண்டு நினைவு தினம்! கண் கலங்கிய அமெரிக்க அதிபரின் மனைவி!

சம்பவத்தன்று ஜோ பைடன் செனட் சபைக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி அளிக்கவில்லை.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: 21ஆம் ஆண்டு நினைவு தினம்! கண் கலங்கிய அமெரிக்க அதிபரின் மனைவி!
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று. பலரது உயிரை பலிகொண்ட இந்த கொடூர சம்பவத்துக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீதும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த 19 பேர் கடத்தினார்கள்.

இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீதும், ஒரு விமானம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன் மீதும் மோதின. நான்காவது விமானம் கட்டுப்பாடு இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். வர்த்தக மையத்தின் 110-அடுக்கு இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்து தரைமட்டமாகின.

இச்சம்பவம் குறித்து அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற சிறப்புடன் அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி மனம் திறந்துள்ளார்.

அவரது சகோதரி போனி ஜேக்கப்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்தவர். சம்பவத்தன்று கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் ஒன்றில் அவரும் இருந்தார்.

இந்நிலையில், தனது சகோதரி போனி ஜேக்கப்ஸ் பென்சில்வேனியாவில் உள்ள வீட்டில் பாதுகாப்பாக இருப்பதை அறிந்ததும், "நான் நேராக போனியின் வீட்டிற்கு சென்றேன்" என்று அதிபரின் மனைவி ஜில் பைடன் பேட்டியில் கூறினார்.

ஜில் பைடன் பேசுகையில், "எனது சகோதரி போனி ஜேக்கப்ஸ் எங்கே இருக்கிறாள், விமானத்தில் இருக்கிறளா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. சம்பவத்தன்று கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் ஒன்றில் அவரும் இருந்தாள் என நான் நினைத்தேன்.பின்னர் அவள் வீட்டில் இருப்பதை அறிந்தேன்.

தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெலாவேர் தொழில்நுட்ப சமுதாயக் கல்லூரியில் தனது மணவர்களுக்கு வகுப்பில் பாடம் கற்பிக்கச் சென்றிருந்தார். கல்லூரி முடிந்த பிறகு பைடன் நேராக தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். ஜோ பைடன், அப்போது அமெரிக்க செனட்டராக பதவியில் இருந்தார்."

இவ்வாறு அவர் கூறினார்.

போனி ஜேக்கப்ஸ் கூறுகையில், "சம்பவத்தன்று அதிகலை 2 மணியளவில் தான் நான் விமானத்தில் வேலையை முடித்துக்கொண்டு எனது வீட்டிற்கு வந்தேன். இதனால் சம்பவத்தன்று காலையில் எழும்ப நேரமாயிற்று. மதியம் எனது சகோதரியிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது. அப்போது பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் நிலைகுலைந்துவிட்டேன். என்னை முதலில் நேரில் பார்க்க வந்தவர் எனது சகோதரி மட்டுமே" என்றார்.

மேலும், சம்பவத்தன்று ஜோ பைடன் செனட் சபைக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி அளிக்கவில்லை. எனினும் அன்றைய தினம் வாஷிங்டன் சென்றிருந்த பைடன் வானளாவ எழுந்திருந்த புகையை கண்டார்.

சம்பவத்தன்று பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட "பிளைட் 93" விமனத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களை கவுரவிப்பதற்காக ஜில் பைடன் விமான உதவியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

"ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் ஷாங்க்ஸ்வில்லுக்குச் செல்கிறோம். சண்டையிட்டவர்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம்: விமானப் பணிப்பெண்கள், கேப்டன்கள், விமானிகள், அந்த உயிர்களைக் காப்பாற்ற போராடியவர்கள் அனைவரையும் கவுரவிப்பதற்காக செல்கிறோம். நாங்கள் எப்பெழுதும் மறக்கமாட்டேம்" என்று ஜில் பைடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com