

தமிழறிஞர் புலவர் குழந்தை 1906-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பிறந்தார். திண்ணைப் பள்ளியொன்றில் கல்வி பயின்ற இவர், சிறுவயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார். இவருடைய பொழுதுபோக்கு பாட்டு எழுதுவது. சென்னை பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
பேச்சாளர், கவிவாணர், மொழி உணர்வாளர். இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். வேளாண் என்ற இதழையும் நடத்தினார். தந்தை பெரியாரின் மீது மரியாதையும், சுய மரியாதை கொள்கை மீது பற்றும் கொண்டவர்.
1948-ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. ராவண காவியம் என்ற காவியத்தைப் படைத்த புலவர் குழந்தை, இருபத்தைந்து நூல்களுக்கு மேல் எழுதி உள்ளார். தொல்காப்பியம், திருக்குறள், நீதிக் களஞ்சியம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவர். சிறந்த உரையாசிரியராகவும், ஆராய்ச்சி யாளராகவும் விளங்கிய இவர், தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு முதலியவற்றை உயிர்மூச்சாய்க் கொண்டு செயல்பட்டவர். இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டு உள்ளார். புலவருக்குத் திருக்குறள் மீது இருந்த ஆழ்ந்த புலமையால், திருக்குறளுக்கு ஓர் உரையையும் எழுதினார். அது, திருக்குறள் குழந்தையுரை என்று அழைக்கப்பட்டது. இவரது நூல்கள் 2006-ல் தமிழக அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டது.