உழைப்பே உயர்வுக்கு வழி

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு 70 வயது. முதுமையினால் உடல் தளர்ந்து போனார். எழுந்து நடக்கவே முடியவில்லை. படுக்கையில் விழுந்து விட்டார்.
உழைப்பே உயர்வுக்கு வழி
Published on

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு 70 வயது. முதுமையினால் உடல் தளர்ந்து போனார். எழுந்து நடக்கவே முடியவில்லை. படுக்கையில் விழுந்து விட்டார். இனிமேல் தான், உயிர் பிழைப்பது அரிது என்று எண்ணிய அவர், தனது நான்கு புதல்வர்களைப் பற்றிநினைத்தார். அவர்கள் உழைக்காமல் சோம்பேறிகளாக ஊர் சுற்றித் திரிவதை நினைத்துக் கவலைப்பட்டார். உழைப்பின் அருமையை அவர்களுக்கு உணர்த்த வேண்டுமென விரும்பிய அவர், தனது நெல் வயல்களைப் பண்படுத்தி வருடந்தோறும் நெல் விளைவித்தால் அவர்கள் சந்தோஷமாக வாழ முடியும், இதனை அவர்கள் எங்கே உணரப் போகிறார்கள் என்று கவலைப்பட்டார். சோம்பேறிப் புதல்வர்களை வயலில் இறக்கி உழுது பயிர் செய்ய வைக்க வேண்டும் என்று பல நாட்களாகச் சிந்தித்தார்.

ஒரு நாள் தன் புதல்வர்கள் நால்வரையும் தன் படுக்கையருகே வரவழைத்த முதியவர், அவர்களை பார்த்து தான், வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுத் தேடிய செல்வம் முழுவதையும் ஒரு பெட்டியில் வைத்து நமது வயலில் ஓரிடத்தில் புதைத்து வைத்துள்ளேன். நான் இறந்தபின் நீங்கள் அந்தப் புதையலைத் தேடி எடுத்துச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்றார். இதனைக் கேட்டதும் புதல்வர்கள் நால்வரும் மகிழ்ச்சியடைந்தனர். ஒருவன், தகப்பனைப் பார்த்து அப்பா! நீங்கள் அந்தப் புதையலை வயலில் எந்த இடத்தில் புதைத்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர், மகனே அதைத்தான் நான் மறந்து விட்டேன். நமது வயலுக்குள் எங்கோ ஒரு இடத்தில் தான் இருக்கிறது. நீங்கள் தேடி பாருங்கள் கிடைக்கும் என்றார். 10 நாட்கள் சென்ற பின் அந்த முதியவர் இறந்து போனார். அவருடைய புதல்வர்கள் நால்வரும் தந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்தி முடித்தனர். பின்னர் ஒரு நாள் புதல்வர்கள் நால்வரும் மண்வெட்டி, கடப்பாரை போன்றவற்றுடன் வயலுக்குச் சென்றனர். வயல் முழுவதையும் ஆழமாக கொத்திப் புதையலைத் தேடினார்கள். புதையல் அகப்படவில்லை. இனி என்ன செய்வது? வயல் முழுவதையும் கொத்தி விட்டோம். இப்படியே விட்டால் சரியில்லை. பண்படுத்தி நெல் விதைப்போம். புதையல் கிடைக்கும் காலத்தில் கிடைக்கட்டும் என்று மூத்த மகன் கூறினான். மற்றவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.

நிலத்தை நன்கு பண்படுத்தினார்கள். நீர்ப் பாய்ச்சினார்கள். நெல் விதைத்தார்கள், அவர்களது நல்ல காலம் மழையும் காலம் தவறாது பெய்தது. நல்ல நெல் விளைச்சல் ஏற்பட்டது. தங்களுக்கு உணவுக்குத் தேவையான நெல்லை வைத்துக் கொண்டு மீதியை விற்றார்கள், பெருந் தொகை கிடைத்தது. அதை நால்வரும் சமமாகப் பிரித்தெடுத்தனர். தந்தை சொன்ன புதையல் இதுதான் என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு அதிக வருமானத்தைப் பெற்றார்கள். உழைப்பின் பயனே உண்மையான செல்வம் என்பதை அவர்களை உணர்ந்து கொண்டார்கள். உழைப்பே உயர்வுக்கு வழியாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com