

புதுடெல்லி,
கொரோனாவின் தாக்கத்திலிருந்து வெளியே வருவதற்குள் டெல்டா உருவாகி அடுத்த அலையை ஏற்படுத்தி, அதிலிருந்து மீள்வதற்குள் ஒமைக்ரான் வந்து, தற்போது 2022-ஆம் ஆண்டின் மீதான நம்பிக்கையை தவிடுபொடியாக்க டெல்மைக்ரான் என்ற புதிய வில்லன் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 88 பேரும், தில்லியில் 67 பேரும், தெலங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், குஜராத்தில் 30 பேரும், கேரளத்தில் 27 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா வகை கொரோனா நாட்டில் பரவலாக பரவியிருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் அதிகளவில் பரவி வருகிறது.
ஒமைக்ரான் தொற்று முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது பல மடங்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸாகவும், இது அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும், அதே வேளையில், டெல்டா வகை கொரோனாவை விடவும், இது குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது. ஒமைக்ரான் பாதித்தவர்களின் பலி எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
ஆனால், தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்க்கையான டெல்மைக்ரான், இரண்டு வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு டெல்மைக்ரான் வகை கொரோனா பரவி வருவதே காரணம் என்று கூறப்படுகிறது.
கொரோனா... டெல்டா... ஒமைக்ரான்...! அடுத்து டெல்மைக்ரான்.. அது என்ன டெல்மைக்ரான் என்று புரிந்துகொள்ள அதிக சிரமப்பட வேண்டாம். உருமாறிய டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்களின் கூட்டுச் சேர்க்கையே டெல்மைக்ரான். இது ஒமைக்ரானை விட அதிதீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாகும்.
இது குறித்து மராட்டிய மாநில கொரோனா சிறப்புக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஷஷாங்க் ஜோஷி கூறியதாவது:-
டெல்மைக்ரான், டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்க்கையாக உள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா சுனாமி ஏற்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா வைரஸ்களால் ஏற்பட்டு வந்த அலைகளையே உலகம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், டெல்மைக்ரானால் சுனாமி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது, 2022-ஆம் ஆண்டின் மீதான நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியுள்ளது.
கொரோனாவின் ஓமைக்ரான் மாறுபாடு டெல்டாவைப் போல இந்தியாவை மோசமாகப் பாதிக்காது என்று வைராலஜிஸ்ட் டாக்டர் ஷாஹித் ஜமீலல் கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தடுப்பூசி சதவீதம் மற்றும் வைரஸின் வெளிப்பாடு ஆகியவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தியாவில் மிக மோசமான இரண்டாவது அலை உள்ளது.
ஓமைக்ரான் அல்லது டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்
அதிக வெப்பநிலை
தொடர் இருமல்
வாசனை அல்லது சுவை உணர்வு இழப்பு அல்லது மாற்றம்
தலைவலி
மூக்கு ஒழுகுதல்
தெண்டை வலி
இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதிலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூடுதல் தவணைகளை செலுத்தவும் நாடுகள் தீவிரம்காட்ட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.