எண்ணெய் இறக்குமதி செலவினம் 11,270 கோடி டாலராக அதிகரிக்கும்

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் எண்ணெய் இறக்குமதி செலவினம் 11,270 கோடி டாலராக அதிகரிக்கும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மதிப்பீடு
எண்ணெய் இறக்குமதி செலவினம் 11,270 கோடி டாலராக அதிகரிக்கும்
Published on

புதுடெல்லி

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் 11,270 கோடி டாலராக அதிகரிக்கும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.

எண்ணெய் பயன்பாடு

நம் நாட்டில் கச்சா எண்ணெய் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே அதற்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது. இதனால் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் இறக்குமதி தேவையை 67 சதவீதமாக குறைக்க நினைப்பது பெரும் சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

83.7 சதவீதமாக உயர்ந்தது

ஏனென்றால் நம் நாட்டில், சென்ற நிதி ஆண்டில் (2018-19) கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தேவை 83.7 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 2014-15-ஆம் ஆண்டில் நமது மொத்த எண்ணெய் தேவைப்பாட்டில் இறக்குமதியின் பங்கு 78.3 சதவீத அளவிற்கே இருந்தது. 2015-16-ஆம் ஆண்டில் அது 80.6 சதவீதமாக உயர்ந்தது. 2016-17-ல் 81.7 சதவீதமாக அதிகரித்தது. 2017-18-ல் 82.9 சதவீதமாக உயர்ந்தது. சென்ற நிதி ஆண்டில் சுமார் 84 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

கடந்த 2016-17-ஆம் நிதி ஆண்டில், நம் நாடு 7,020 கோடி டாலருக்கு (சுமார் ரூ.4.70 லட்சம் கோடி) 21.39 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. 2017-18-ஆம் ஆண்டில் 8,800 கோடி டாலருக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) 11,190 கோடி டாலரை எட்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27.15 சதவீதம் அதிகமாகும்.

23.30 கோடி டன்

இந்த நிலையில், நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நம் நாடு 23.30 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என்றும், இதற்காக 11,270 கோடி டாலர் செலவிட வேண்டி இருக்கும் என்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வுப் பிரிவு மதிப்பீடு செய்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் செலவினம் 0.71 சதவீதம் மட்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வுப் பிரிவின் மார்ச் காலாண்டு மதிப்பீடுகளின்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் விலை உயர்ந்தால் இறக்குமதி செலவு ரூ.3,029 கோடி அதிகரிக்கும். இதே போன்று ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் குறையும்போது இறக்குமதி செலவினம் ரூ.2,473 கோடி உயரும்.

உள்நாட்டு உற்பத்தி

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில், உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி 3.42 கோடி டன்னாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 4 சதவீதம் குறைவாகும். ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களின் எண்ணெய் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

இதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உற்பத்தி (2.23 கோடி டன்னில் இருந்து) 2.1 கோடி டன்னாக குறைந்துள்ளது. அடுத்து ஆயில் இந்தியாவின் உற்பத்தி 2.5 சதவீதம் சரிவடைந்து 33 லட்சம் டன்னாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தி 98 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது உற்பத்தி 2 சதவீதம் குறைந்து இருக்கிறது.

இந்தியா 3-வது இடம்

நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் பெருமளவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com