பான் கார்டு

பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்குத் தேவைகளுக்குத்தான் என்று நினைத்துக் கொள்கின்றனர். வரி கட்டாதவர்கள் நமக்கு அது எதற்கு என்று அதைப் பொருட்படுத்துவதில்லை.
பான் கார்டு
Published on

ஆனால் இது வருவான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல அல்லது வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டும் தேவையான விஷயமும் கிடையாது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.

நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு 10 எழுத்துக்களை கொண்ட ஒரு குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. அடிக்கடி மாற்றத்தக்கது அல்ல. முகவரி மாறினாலோ அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றால்கூட இந்த எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான்கார்டு அவசியம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.எஸ்.டி.எல். அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான்கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது.

இதன் மூலம் வரி ஏய்ப்பு மறைமுகமாக தடுக்கப்படுகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான்கார்டு பயன்படுகிறது. தனிநபர் அல்லது நிறுவனம் குடும்ப அமைப்பு என யார் பெயருக்கு வேண்டுமானாலும் பான்கார்டு வாங்கலாம். ஆனால் ஒருவர் பெயரில் அல்லது ஒரு நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட பான்கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படும்.

பான்கார்டு வாங்கும் நடைமுறை வெகு எளிதானது. பான் எண் வாங்குவதற்கு என்று வயதுவரம்பு கிடையாது. வருமான வரி கட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை. எந்த நிறுவனத்திலும் பணியாற்ற வேண்டும் என்கிற தேவையுமில்லை. ஆதார் அடையாள அட்டை போல, அங்கீகாரம் பெற்ற அரசின் அமைப்பு வழங்கும் வரிக்கணக்கு எண். நீங்கள் வருமான வரி கட்டினாலும், கட்டவில்லை என்றாலும் உங்களுக்கு என்று ஒதுக்கப்படும் எண் இது.

பிறந்த குழந்தைக்குக் கூட பான் எண் வாங்க முடியும். குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பான் கார்டு வாங்கிக் கொடுக்கும் முகவர்களிடம் தேவையான விவரங்களை கொடுத்தால், அவர்கள் என்.எஸ்.டில்.எல். நிறுவனத்தில் விண்ணப்பம் செய்வார்கள். அங்கிருந்து நேரடியாக உங்கள் வீட்டு முகவரிக்கு பான் கார்டு அனுப்பப்பட்டு விடும். நேரடியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தும் பான்கார்டு வாங்கலாம். இதற்கு முகவரிச் சான்று, அடையாளச் சான்று, வயது சான்று போன்ற ஆவணங்களும், உங்களது புகைப்படமும் இணைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com