வாழ்க்கையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த பொழுதுபோக்குகள்

பொழுதுபோக்கு என்பது வெறுமனே நேரத்தை கழிப்பதற்கான செயல் அல்ல. மனதையும், உடலையும், சிந்தனையையும் மேம்படுத்தும் பயிற்சி முறையாகும்.
வாழ்க்கையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த பொழுதுபோக்குகள்
Published on

பொழுதுபோக்குகளை பற்றிப் பேசும்போது, ​​அவை வெறும் வேடிக்கைக்காக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. உங்களை நீங்களே மேம்படுத்திக்கொள்ள உதவும் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளையும் நீங்கள் கொண்டிருக்கலாம்.

பொழுதுபோக்கு என்றாலே அதனை ‘நேரத்தைக் கொல்லும்’ செயலாகவே பலரும் கருதுகிறார்கள். ஆனால், நேரத்தை எந்த மாதிரியான பொழுதுபோக்குக்கு நாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமானது. கொண்டாட்டம், கேளிக்கை விருந்து, இன்பச் சுற்றுலா உள்ளிட்ட விஷயங்களுக்காக நேரத்தை செலவழிப்பது மட்டுமே பொழுதுபோக்கு அல்ல. கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்காமல் மனதையும், வாழ்க்கையையும் மேம்படுத்தும் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சோர்வாகவோ, மன அழுத்தத்திலோ அல்லது கடினமான சூழலை கடந்து செல்வதாகவோ உணர்ந்தால் உங்கள் நேரத்தை அர்த்தமுள்ளதாக முதலீடு செய்து, பல மடங்கு பலனைப் பெற உதவும் பொழுதுபோக்குகளும் உள்ளன. அவற்றுள் வாழ்க்கையை மேம்படுத்த வழிவகை செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து பார்ப்போம்

ஆழ்ந்த வாசிப்பு

இன்றைய உலகில் நம்மில் பலருக்கும் ‘ஸ்குரோல்-மூளை’ உருவாகிவிட்டது. அதாவது சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் மூழ்கி கிடப்பதால் சிந்திக்கும் திறன் குறைந்து மனச் சோர்வு மற்றும் கவனம் சிதறும் நிலை உண்டாகிவிட்டது. அதனால் எதிலும் நீண்ட எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு வாசிப்பு பழக்கம் மட்டுமே மிகச்சிறந்த மருந்தாகும்.

கருத்தாழம் மிக்க நல்ல புத்தகத்தை கையில் எடுத்து அமைதியான சூழலில் அமர்ந்து ஒரு மணி நேரம் படித்தாலே கவனிக்கும் திறன் மீண்டும் உயிர் பெற தொடங்கும். சமூக ஊடகங்களை இடைவிடாமல் ‘ஸ்குரோல்’ செய்வது என்பது கை நிறைய மிட்டாய்களை சாப்பிடுவது போன்றது. ஆனால் ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் என்பது சத்தான உணவை ருசிப்பதற்கு இணையானது. அது உங்கள் சிந்தனை முறையையும், பேசும் விதத்தையும். உலகை பார்ப்ப தற்கான அணுகுமுறையையும் மாற்றத் தொடங்கும்.

புகைப்படம் எடுத்தல்

புகைப்படக்கலை உங்கள் அன்றாட வாழ்க்கையை புதிதாக தொடங்க வைக்கும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் உங்கள் கண்ணில் படும் காட்சிகளை புகைப்படமாக எடுக்கும் ஆர்வத்தை தூண்டிவிடும். ஒரு கட்டிடத்தின் மீது விழும் ஒளியையோ, ஒரு அந்நியரின் முகபாவ னையையோ நீங்கள் கவனிக்க தொடங்குவீர்கள். அது உங்களை நிகழ்காலத்தில் வாழ செய்யும். அன்றாட வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் அழகை கண்டுபிடிக்கவும். அதனை புகைப் படமாக ஆவணப்படுத்தவும் வித்திடும். இதனால் சாதாரணமான பயணம்கூட ஒரு காட்சி அனுபவமாக மாறிவிடும்.

கவனிக்கும் திறன்

செல்போனில் பேசாமலோ, ஹெட்செட்டில் பாடல் கேட்காமலோ நடக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கவனமும், சிந்தனையும் நடைபாதை மீது மட்டுமே இருக்க வேண்டும். ஆரம்பத்தில் சங்கடமாக தோன்றலாம். ஏனெனில் மூளை அங்கும், இங்கும் பார்ப்பதற்கு கண்களை தூண்டி விடும். ஆனால் 10 நிமிடங்கள் நடைபாதை மீதே கவனத்தை பதித்து நடக்கும்போது மனதை சூழ்ந்திருக்கும் குழப்பம் மெல்ல மெல்ல விலக தொடங்கும். எது பற்றிய தகவலை யும், அசை போடாமல் அமைதியாக இருக்கும் சூழலில்தான் புதிய யோசனைகள் பிறக்கின்றன.

சமைக்க கற்றுக்கொள்ளுதல்

நீங்கள் உணவை சாப்பிடுபவராக மட்டுமே அல்லாமல், அதை சமைத்து உருவாக்கும் நபராகவும் மாறும்போது உங்களுக்குள் பெரிய உளவியல் மாற்றம் நிகழும். எளிய, சுவையான உணவை நீங்களே சமைப்பது அடிப்படை வெற்றியாகும். அடிக்கடி வெளியில் சாப்பி டும் உணர்வை கட்டுப்படுத்தும் என்பதால் பணத்தை சேமிக்க உதவும். உடல் நலத்தையும் மேம்படுத்தும். மேலும் தன்னம்பிக்கையையும், சுயசார்பு உணர்வையும் வளர்த்தெடுக்கும். அத்துடன் வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பயனுள்ள பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்றாக அமையும்.

கடினமான உடற்பயிற்சி

பளு தூக்குதல் போன்ற உடலை கடினப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வது வெறும் உடல் தோற்றத்தை மெருகேற்றுவதற்கு மட்டுமல்ல. உங்களை பலவீனமாக உணராமல் இருக்க செய்யும் வலிமைமிக்க பயிற்சியாகும். உடல் ரீதியாக நீங்கள் வலிமை பெறும்போது மன உறுதியும் அதிகரிக்க தொடங்கும். நீங்கள் நினைத்ததை விட அதிகமாக எதையும் செய்ய முடியும் என்பதை கற்றுக்கொள்வீர்கள். இந்த தன்னம்பிக்கையே வாழ்க்கையின் ஒவ் வொரு கட்டத்திலும் பிரதிபலிக்கும்.

இசை கற்றுக்கொள்ளுதல்

இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொள்வதற்கு ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். தவறுகள் செய்வீர்கள். ஆனால் அதனை திருத்துவதற்கு முயற்சி செய்துகொண்டே இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் தவறுகளை சரிசெய்து சிறப்பாக இசைக்க கற்றுக்கொள்வீர்கள். அனைத்திலும் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த உலகில், இசை உங்களை ஒரு புதிய கற்றலாளராக இருக்கச் செய்கிறது. இது ஒரே நேரத்தில் உங்கள் முழு மூளையையும் செயல்படுத்தும் சில செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு பாடலை சரியாக வாசிக்கக் கற்றுக்கொள்ளும் அந்த தருணம் அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தரும்.

தோட்டக்கலை ஈடுபாடு

ஒரு செடியை விரைவாக வளர வைக்க முடியாது. அது விரைந்து பயன் கொடுக்க வேண்டும் என்று அவசரப்படுத்தவும் முடியாது. நடப்பட்ட செடிகள், மரங்கள் வளர்ந்து தோட்டமாக மாற வேண்டுமென்றால் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுபோல்தான் வாழ்க்கையும். அவசரகதியில் எதையும் செய்ய முடியாது. சில சமயங்களில் பொறுமையும், சில சந்தர்ப்பங் களில் விவேகமும் தேவைப்படும்.

தோட்டக்கலை உங்களுக்கு பொறுமையை கற்றுக்கொடுக்கும். இந்த உலகில் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அது உணர்த்தும். வாரக்கணக்கிலோ அல்லது மாதக்கணக்கிலோ. பூக்கும் செடியை பராமரிப்பதற்கு நேரம் செலவிடுவது டிஜிட்டல் வாழ்க்கை தர முடியாத நிம்மதியைம், அமைதியையும் கொடுக்கும்.

டைரி எழுதுதல்

டைரி எழுதுவது சாதாரண பழக்கமாக தோன்றலாம். ஆனால் உண்மையில் அது மனதில் இருக்கும் சிந்தனைகளை வெளியேற்ற வைக்கும் சிறந்த செயலாகும். காகிதத்தில் உங்கள் எண்ணங்களை எழுதத்தொடங்கும்போது, வாழ்க்கையில் தொடர்ந்து நிகழும் பிரச்சினைகள் தெளிவாக புரிய ஆரம்பிக்கும். "நான் ஏன் மூன்று வாரங்களாக ஒரே விஷயத்தை பற்றி கவ லைப்படுகிறேன்?' என்ற கேள்வி உங்களுக்குள் எழும். இனி அதுபோல் கவலைப்பட்டு மனதை காயப்படுத்தக்கூடாது, இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நேர்மறை எண்ணம் உருவாகும். டைரி என்பது உங்கள் உள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. உங்களுக்கு நீங்களே பொய் சொல்வதை நிறுத்த உதவிடும்.

உட்காருதல்

எதுவும் செய்யாமல் 'சும்மா' உட்காருவதும் கூட பொழுதுபோக்கின் ஒரு அங்கம்தான். பத்து நிமிடங்கள் அமைதியாக அமருங்கள். ஒவ்வொரு நிமிடத்தை கடப்பதற்குள் எதையாவது சிந் தித்துகொண்டே இருப்பீர்கள். உங்கள் எண்ணத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதற்கு உடனடியாக பதில் அளிக்க முடியாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய சாதனை தான். ஏனெனில் மற்றவர்கள் பதற்றமடையும் சூழ்நிலைகளிலும் நீங்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வழிவகை செய்யும்.

புதிய மொழி கற்றல்

ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது மூளைக்கு ஒரு வித்தியாசமான பயிற்சியாக அமை யும். உங்களை புதிய கோணங்களில் சிந்திக்கவும் தூண்டும். உலகை புரிந்துகொள்வதற்கு உங்கள் மொழி மட்டுமே சரியானது அல்ல என்பதை அது உணர்த்தும். மேலும் மொழிபெ யர்ப்பு செயலிகளால் உணர்த்த முடியாத கலாசார புரிதலையும் மனிதநேய உணர்வையும் வளர்த்தெடுக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com