

பாடல்:
நனி மிகப் பசந்து தோளும் சாஅய்
பனி மலி கண்ணும் பண்டு போலா;
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ? மடந்தை!
உவக்காண் தோன்றுவ, ஓங்கி வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப ஓது அரும்
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே!
(நற்றிணை: 237)
பாடல்: காரிக்கண்ணனார்
திணை: பாலை
துறை: தோழி உரை மாறுபட்டது
பொருள் விளக்கம்:
தோள் மிகவும் பசலை நிறம் பெரிதும் பாய்ந்து தளர்கிறது. கண் முன்பு போல் இல்லாமல் கண்ணீர்ப் பெருக்குடன் காணப் படுகிறது. இனிய உயிர் போன்று பிரிக்கமுடியாத காதலர் உன்னை விட்டுவிட்டுக் காலம் நீட்டிக்கிறார் என்று நீ அவர்மீது புலவி கொள்ளும் சினத்துடன் ஊடுகின்றாய் அல்லவா? மடந்தைப் பெண்ணே! அங்கே பார் மழை மேகங்கள் பொழிவதற்காக வானத்தில் ஏறுகின்றன. அரசன் அண்டிரன் தன்னை நாடி இரவலர்கள் வருகிறார்கள் என்று அவர்களுக்கு வழங்குவதற்காக யானைக் கூட்டத்தைத் தொகுத்து நிறுத்துவது போல உலகம் மகிழும்படி மேகக் கூட்டம் வானத்தில் கூடிக் குன்றென ஏறுவதைப் பார். மழைக்காலம் வரும்போது திரும்பிவிடுவேன் என்று சொன்னாரல்லவா? எனவே திரும்பிவிடுவார். கவலை வேண்டாம். இவ்வாறு சொல்லித் தோழி தலைவியைத் ஆற்றுப்படுத்துகின்றாள்.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஆய் என்பவன் பொதிகை மலைச்சாரலில் உள்ள ஆயக்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவன் வேள் ஆய் என்றும் ஆய் அண்டிரன் என்றும் இரு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறான். இவன் வலிமையான தோள்களை உடையவன், இனிய மொழிகளைப் பேசி மகிழ்பவனாகவும், பெறுவதற்கு அரிய சிறந்த மணியையும், ஆடையைப் பெற்றவனாகவும் திகழ்ந்தான்.
பொதிகை மலையில் உள்ள ஆய் நாடு, யானைக்கூட்டங்கள் நிரம்பிய நாடாகும். பரிசு வேண்டி வந்தவர்களுக்கு யானைகளைக் கொடுத்து மகிழ்ந்தவன் ஆய் அண்டிரன். ஒரு முறை காட்டிற்குச் சென்ற போது நீலநாகம் ஒன்று ஒரு ஆடையினை விட்டுச் சென்றதாகவும், அதனை ஆய்அண்டிரன் எடுத்து வந்து தான் வழிபடும் சிவபெருமானுக்குச் சாத்தியதாகவும் புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அக்காலத்தில் பொதிகை மலையில் யானைகள் அதிகமாக இருந்தன. ஆய் என்பவன் யானைகளைப் பிடித்து வந்து பழக்கினான். ஆண் யானைகளைப் போருக்கு ஏற்றபடியும், பெண் யானைகளை வாகனமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழகச் செய்தான். அவனிடம் நூறு யானைகளுக்குக் குறைவாக என்றும் இருந்ததில்லை. அவனிடம் வரும் பாணர்களுக்கும், புலவர்களுக்கும் மற்றவர்கள் கொடுப்பது போலப் பொன்னும், மணியும் கொடுத்து மகிழ்வான். அவற்றோடு யானையையும் பரிசிலாக வழங்குவது கூடுதல் பெருமையாகும். யானைப் பரிசில் தருபவன் என்று அவனைத் தமிழ் மக்கள் போற்றிப் பாராட்டுரைகளைப் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.
உறையூரில் ஏணிச் சேரி முடமோசியார் என்ற அடையாளத்தோடு ஒரு புலவர் வாழ்ந்து வந்தார். முடவராக இருந்தாலும், தமிழ்ப் புலமையில் வல்லவராகத் திகழ்ந்தார். அவரது உறுப்புக் குறைபாடு காரணமாக யாரும் அவரை அவமதிப்பதில்லை. அக்காலத்தில் தமிழ் மக்கள் யாரையும் உறுப்புக் குறைவுக்காக இழிவு படுத்திச் சொல்வது இல்லை. இயற்கையாக அமைந்த குறையைக் குறையாகவும் கருதுவது இல்லை. குணத்தினால் குறைவிருந்தால், அதைத்தான் இழிவாக எண்ணுவார்கள். ஏணிச்சேரி முடமோசியார், ஆய்குடிக்கு ஒரு முறை சென்றிருந்த போது, ஆய் அவரிடம் பேரன்பு பாராட்டியதோடு, அவருடைய அறிவுச் சிறப்பையும், கவிபாடும் ஆற்றலையும் அறிந்து வியந்தான்; மகிழ்ந்தான்; இருவரிடையேயும் நெருங்கிய அன்பு பெருகிற்று. மோசியார் அங்கேயே தங்கி, இன்றியமையாத காலங்களில் உறையூருக்கு வருவார், சில நாட்கள் தங்கி இருந்து விட்டு, மீண்டும் ஆயக்குடிக்குச் சென்று விடுவார். வண்டு மலரில் புகுந்து விட்டால், இன்னிசை எழுப்பிக் கொண்டே இருக்கும். அப்படியே வள்ளலை அணுகி வாழ்ந்த மோசியாரிடம் பாடல்கள் பல எழுந்தன. அவனுடைய பண்புகளை அறிந்து நயமாக விளக்கிப் பாடினார். ஒரு பாட்டில்,
வடக்கே இமயம் இருக்கிறது, அதனோடு ஒத்த பெருமை உடையதாகத் தெற்கே ஆய்குடி இருக்கிறது. அது இல்லையானால் இந்த உலகம் பிறழ்ந்து விடும்
என்று மனமுருகிப் பாடினார்.
ஒருநாள் அவரைத் தன் தேரில் அழைத்துச் சென்றான் ஆய். காட்டு வழியே அந்தத் தேர் சென்றது. அங்கே பழக்கப்பட்ட பல யானைகள் இருந்தன. அவற்றைப் பார்த்த புலவர் ஒரு பாட்டைப் பாடினார். இந்தக் காட்டில் இத்தனை களிறுகள் இருக்கின்றனவே! இந்தக் காடு, மேகக் கூட்டங்கள் தங்கும் மலையையும் சுரபுன்னை மலரால் தொடுத்த கண்ணியையும் உடைய ஆய் அண்டிரனுடைய குன்றத்தைப் பாடிற்றே? என்று பாடினார். அவனுடைய யானைக் கொடையையே அப்பாடலில் சிறப்பித்தார்.
ஒருநாள் சில அன்பர்களுடன் தனியே பேசிக் கொண்டிருந்தார் மோசியார். அப்போது ஆயினுடைய ஈகைச் சிறப்பைப் பற்றிய பேச்சு வந்தது.
பொருளைச் சேமித்து வைப்பதனால் பயன் என்ன? அது எப்படியும் அழிந்து போவது. அதை அறிந்து தன்னிடம் வருபவர்களுக்கு வாரி வழங்குகிறான் ஆய் என்றார் ஒருவர்.
இந்த உலக வாழ்வு ஒன்றையே எண்ணித் தமக்கு வேண்டிய இன்பங்களைத் துய்த்து வாழும் செல்வர்கள் பலர் இருக்கிறார்கள். பிறருக்கு ஒன்றையும் அவர்கள் ஈவதில்லை. ஆய் இங்கே நன்கு வாழ்வதோடு மறுமையிலும் நல்ல இன்பம் கிடைக்க வேண்டுமென்று அறம் செய்கிறான்; வருங்கால வாழ்வை நினைக்கும் அறிவாளன் அவன் என்று வேறு ஒருவர் கூறினார். அருகில் இருந்த மோசியார் உடனே, நீங்கள் சொன்ன இரண்டு கருத்தும் பிழை என்றார்.
என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? என்று இருவரும் கேட்டார்கள். இது செய்தால் இது கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஒன்றைச் செய்தால் அது வாணிகத்தைப் போல ஆகிவிடும். இம்மையிலே செய்வது மறுமைக்கு வந்து உதவும் என்று, தான் செய்யும் அறத்துக்குப் பயனை எதிர்நோக்கும் அறவிலை வாணிகன் அல்லன் ஆய். சான்றோர்கள் போன வழி இது என்ற ஒரே நினைவோடு இந்த வள்ளன்மையை மேற்கொண்டிருக்கிறான் என்று விடை கூறினார் புலவர். பிறகு அந்தக் கருத்தையே பாடலாகப் பாடினார்.
ஆய் அண்டிரனுடைய நாடு வளம் படைத்த நாடு. கொங்கு நாட்டில் இருந்த சில வேளிர் அந்நாட்டின் ஒரு பகுதியையாவது தங்கள் உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணினர். அவர்களிடம் வேற்படையை உடைய வீரர் பலர் இருந்தனர். அவர்களோடு ஒருமுறை சேரநாட்டு வழியே வந்து படையெடுத் தனர். சேர மன்னன் அவர்களுக்கு இணக்கமாக இருந்தான்.
அண்டிரன் அஞ்சவில்லை. அவனிடம் யானைப் படை பெரிதாக இருந்தது. யானையை வேலால் கொல்வது எளிது. வேற்படை கொங்கர்களிடம் சிறப்புடையதாக இருந்தது. யானைப் படைக்கு எதிர் வேல் வீரர் படை என்பதை உணர்ந்தே அவர்கள் படையெடுத்து வந்தார்கள். ஆய் அண்டிரன் தக்க படை வகுப்புடன் எதிர்த்தான். கடும் போராகத் தோன்றிய அது பிறகு எளிய போராகிவிட்டது. வேலை ஓச்ச முடியாமல் அதனைப் பிடித்த வீரர்களை ஆயின் படை வீரர்கள் கொன்றனர். எதிர் நிற்கமாட்டாமல் புறங் கொடுக்கத் தொடங்கினர் கொங்கர். ஆய் அவர்களை விடாமல் துரத்தினான். மேற்குக் கடற்கரை வரைக்கும் அவர்களை விரட்டி அடித்தான். இறுமாந்து ஆரவாரம் செய்துவந்த வேல் பிடித்த வீரர்கள் யாவரும் அப்படியப்படியே போர்க்களத்தில் வேல்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அந்த வேல்களை யெல்லாம் பொறுக்கித் தன் ஊரில் ஓரிடத்தில் குவிக்கச் செய்திருந்தான் ஆய்; அவை மலைபோலக் குவிந்திருந்தன.
இந்த வீரச் செயலையும் ஆயின் கொடையையும் இணைத்து ஒரு பாட்டுப் பாடினார் மோசியார். மணிகளைப் பதித்த அணிகலன்களை அணிந்த ஆய் வள்ளலே, நீ வருகிறவர்களுக்கெல்லாம் யானைகளை அளிக்கிறாயே! இப்படிக் கொடுத்துக்கொண்டே இருந்தால் இங்கே யானைக்குப் பஞ்சம் வந்து விடாதோ? அல்லது உன் நாட்டில் மட்டும் ஒரு பெண் யானை கருவுற்றால் ஓர் ஈற்றுக்குப் பத்துக் கன்றுகளைப் போடுமோ! வருகிற புலவர்களுக்கும் பாணர்களுக்கும் இனிய முகத்தோடு நீ வழங்குகிற யானைகளைக் கணக்கில் அடக்க முடியுமா? நீ கொங்கர்களை வென்று மேல் கடலுக்கு அனுப்பிய போது அவர்கள் களத்திலே போட்டுச் சென்ற வேல்களைத்தான் எண்ண முடியாதென்று நினைத்தேன். அவற்றையாவது எண்ணி விடலாம் என்று தோன்றுகிறது. நீ கொடுக்கும் யானையைக் கணக்கில் அடக்க முடியாது போல் இருக்கிறதே! என்று சுவைபடப் பாடினார்.
தன்னைப் பகைத்த கொங்கரை, ஆய்அண்டிரன் எதிர்த்துப் போரிட்டான். போர்க்களத்தில் தோல்வியுற்ற கொங்கர், வேல்முனையை மாற்றி எறிந்து விட்டு, போர்க்களத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். தன்னிடமிருந்த எல்லாப் பொருட்களையும், புலவர்களுக்கும், இரவலர்களுக்கும் ஆய் கொடுத்து விட்டதால், அவனிடம் வறுமை குடி கொண்டது. நாடும் அழகு குன்றியது. கொடுக்க ஒன்றுமில்லையே என்று எண்ணிய ஆய் மனம் வருந்த உடல் பாதித்து, ஒரு நாள் தன் இன்னுயிரை நீத்தான் என்று சங்கஇலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. அக்குறிப்புகளை எண்ணும்போதே நம் இதயம் கனக்கிறதே.. ஆய் என்ற அந்த வள்ளலின் ஆதரவால் உதவி பெற்ற உள்ளங்கள் எப்படியெல்லாம் கதறிக் கண்ணீர் விட்டிருக்கும் என்பதை எடுத்தியம்ப வார்த்தைகள் என்னிடம் இல்லை!.
-தொடரும்.