

சோப்பு விற்பனையில் இறங்கி இன்று கோடிகளில் வருமானம் ஈட்டும் இளம் தொழில்முனைவோராக மாறி ஊக்கப் பேச்சாரளாக உருவெடுத்திருக்கிறார். மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர் ராஜ் ஷமானி. இவர் படிப்பில் அவ்வளவு பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக உடல்நலம் பாதித்த தந்தையின் தொழிலை கையிலெடுத்தார்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் கெமிக்கல் விற்பனையில் இறங்கிய அவர் பின்னர் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டார். சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார். இதன் மூலம் அவரின் நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்தது.
இந்தியாவின் மத்திய பகுதியில் பிரபல சலவை நிறுவனமாக இவரது நிறுவனம் மாறியது. இந்த வளர்ச்சியால் அவரின் தொழில் மதிப்பு 200 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி கடந்த 2015-ம் ஆண்டு ஐ.நா. சபையில் இளம் தலைவர்களுக்கான இளைஞர் பிரதிநிதிகள் திட்டத்தில் பங்கேற்க வழிவகுத்தது. இதற்கிடையே, ஊக்கப் பேச்சாளராக உருவெடுத்தார் ராஜ் ஷமானி. அவர் இதுவரை 26 நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட உரைகளை நிகழ்த்தியுள்ளார்.
யூடியூப்பில் பிரபல ஊக்கப் பேச்சாளராகவும் திகழ்ந்துவருகிறார். அவரின் பேச்சை கேட்க பெரும் கூட்டமே உள்ளது. அவரது யூடியூப் சேனலை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்து பின்தொடர்கிறார்கள். அவர் வெளியிடும் ஊக்கப் பேச்சுக்கள், வணிகம் மற்றும் சந்தையிடுதல் தொடர்பான வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களைப் பெறுகின்றன.