வீட்டில் அகர்பத்தி கொளுத்துவது ஆபத்தா..?

ஒருசில அகர்பத்தி வகைகளில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன.
வீட்டில் அகர்பத்தி கொளுத்துவது ஆபத்தா..?
Published on

வீட்டில் பூஜை செய்து வழிபடும்போது அகர்பத்தி பயன்படுத்துவது நடைமுறையில் இருக்கிறது. வீடு முழுவதும் நறுமணம் கமழ செய்யும் அகர்பத்தியில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களும் கலந்திருகின்றன. அதிலும் ஒருசில அகர்பத்தி வகைகளில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளால் உடல் உறுப்புகள் கடும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.

சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அகர்பத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அகர்பத்தியில் இருந்து வெளியாகும் புகை காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும். இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு நேரும்.

தொடர்ந்து அகர்பத்தி உபயோகிக்கும்போது இதய நோயாய் ஏற்படும் உயிரிழப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்பிருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் புகை ரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அகர்பத்தி வாசனையை குழந்தைகள் நுகர்வதும் ஆபத்தானது. கர்ப்பிணி பெண்கள் நுகரும்போது கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அகர்பத்தியில் இருந்து வெளியேறும் புகை குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு தோல் ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படும். அகர்பத்தி பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்னும் பட்சத்தில் குறைந்த நேரம் மட்டுமே உபயோகிப்பது நல்லது. நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள் முற்றிலும் தவிர்ப்பதே சிறந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com