இந்தியாவின் ஐஸ்கிரீம் தலைநகரம் எது தெரியுமா?

இங்கு மக்கள் வருடம் முழுவதும், குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
ஐஸ்கிரீம்
Published on

ஐஸ்கிரீம் தலைநகர்

பொதுவாக ஐஸ்கிரீம் என்பது கோடைகால உணவாகவே கருதப்படுகிறது. ஆனால் கர்நாடகாவின் மங்களூரு நகரத்தில் அது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே மங்களூரு, 'இந்தியாவின் ஐஸ்கிரீம் தலைநகர்' என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இந்த நகரத்தில், பில்டர் காபி, பிரியாணியைப் போலவே ஐஸ் கிரீமிற்காக மக்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் இரவு நேரம் வந்துவிட்டாலே போதும் வண்ண விளக்குகளால் இந்த நகரமே திருவிழா போல் காட்சி அளிக்கும்.

இரவு உணவுக்குப் பிறகு ஐஸ்கிரீம்

இங்கு மக்கள் ஆண்டு முழுவதும், குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. பல பிரபல ஐஸ்கிரீம் நிறுவனங்கள் மங்களூருவிலிருந்தே உருவாகியுள்ளன. மேலும், பழங்கள், ஜெல்லி, நட்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் அடுக்குகளால் தயாரிக்கப்படும் 'கட்பட்' (Gadbad) என்ற சிறப்பு ஐஸ்கிரீம் இந்நகரின் அடையாளமாகவே விளங்குகிறது.

20-ம் நூற்றாண்டில் தொடக்கம்

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐஸ்கிரீம் மங்களூருவுக்குள் நுழைந்தது. இருப்பினும், உள்ளூர் மக்கள் அதை எவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டு, தங்களின் அன்றாட விருப்பமான ஒன்றாக மாற்றிக்கொண்டார்கள் என்பதுதான் அந்த நகரத்தைத் தனித்துவமாக்கியது.

உலகளாவிய போக்குகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நகரங்களைப் போலல்லாமல், மங்களூரு தனது ஐஸ்கிரீம் கலாசாரத்தை உள்ளூர் சுவைகளை மையமாகக் கொண்டு வடிவமைத்துள்ளது.

சாதாரண பொதுமக்களும் ருசிக்கலாம்

ஒரு காலத்தில் உயர்குடிமக்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த ஐஸ்கிரீம், விரைவில் சாதாரண பொதுமக்கள் ருசிபார்த்து சாப்பிடுவம் தெருவரை வந்தடைந்தது. கட்டுப்படியான விலை மற்றும் பரவலான கிடைக்கும்தன்மை ஆகியவை ஐஸ்கிரீமை அனைவருக்கும் கிடைக்கச் செய்து, அது அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பி உண்ணும் ஒரு பிரதான இனிப்புப் பண்டமாக மாற்றியது.

'காட்பாட்' (Gadbad) போன்ற பிரத்யேகமான சுவைகள் மற்றும் ஆண்டு முழுவதும் நீடிக்கும் ஐஸ்கிரீம் கலாசாரத்திற்கு இது புகழ்பெற்றது. உலகின் தலைசிறந்த ஐஸ்கிரீம் இடங்களில் ஒன்றாக அறியப்படும் 'பப்பாஸ்' (Pabba's) பார்லர் உட்பட ஏராளமான பிராண்டுகள் இங்கு உள்ளன.

ஐஸ்கிரீமை ஒரு இனிப்பாக மட்டுமல்லாமல், கலாசாரமாக மாற்றிய நகரம் என்ற பெருமையை மங்களூரு பெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com