

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் பஞ்சர் ஆன லாரியின் டயர்களை கழற்றி மாற்றி கொடுத்து வருகிறார் ஒரு பெண்மணி. ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு உதாரணமாக அவர் திகழ்கிறார்.
பெண்கள் எந்த வேலையையும் மன உறுதியுடனும் விருப்பத்துடன் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார். தெலுங்கானாவின் முதல் பெண் மெக்கானிக் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த எடலப்பள்ளி ஆதிலட்சுமி, பத்ராத்ரி கொத்தகுடம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். பஞ்சர்களை சரிசெய்வதிலும், டயர்களை
மாற்றுவதிலும் கடந்த ஐந்து வருடங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தாயான இவர், தனது கணவர் பத்ரமுக்கு ஆட்டோமொபைல் ரிப்பேர் கடை நடத்துவதில் உதவுகிறார். அவருடைய கணவர் நடத்தி வரும் வாகன பராமரிப்பு மையத்தில் இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், டிராக்டர்கள், லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் பழுதான டயர்களை மாற்றி கொடுக்கிறார் அவர்.
கடைக்கு முதன்முறையாக வருபவர்கள், முதலில் ஒரு பெண் கனமான டயர்களை தூக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். ஆண்கள செய்யும் வேலையை பெண் செய்வதை பிரம்மிப்புடன் பார்த்து செல்கின்றனர்.
அவருடைய இந்த வாழ்க்கை பயணம் குறித்து ஆதிலட்சுமி கூறுகையில், என் கணவர் கடையில் இல்லாத நேரத்தில் கடைக்கு வாகனங்களை கொண்டு
வருபவர்களை பார்க்கும்போது நான் ஏமாற்றமாகவும் உதவ முடியாதவளாகவும் உணர்ந்தேன்.
ஏனென்றால் என்னால் அந்த வேலைகளை செய்ய முடியாது. இதனால் மன உளைச்சலில் இருந்தேன்.குடும்பத்தின் வருமானம் குறைந்தது.
பின்னர், ஏன் என்னால் முடியாது..? என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
டயர்களில் காற்றை நிரப்புவது போன்ற சிறிய விஷயங்களில் தொடங்கினேன். என் ஆர்வம் அதிகரித்து, நான் நம்பிக்கையைப் பெற்றபோது, திரும்பிப்
பார்க்கவில்லை. தொடர்ந்து பயிற்சி பெற்று வேலையை கற்றுக்கொண்டேன் என்றார் இந்த சாதனை பெண்மணி.
இப்போது அந்த பகுதியில் டயர் மாற்ற வேண்டுமென்றால், முதலில் எடலப்பள்ளி ஆதிலட்சுமியை தேடித் தான் மக்கள் செல்கின்றனர்.
என்ன ஒரு சாதனை பயணம்!