

பாரத ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கூட்டம் இம்மாதம் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற்றது. 7-ந் தேதி வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை இவ்வங்கி அறிவித்தது. சக்தி கந்ததாஸ் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கை முடிவுகளை வெளியிட்டது.
அவரது தலைமையின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வட்டி விகிதங்களை நிர்ணயித்தது. 6 உறுப்பினர்களில் சக்தி கந்ததாஸ் உள்பட 4 பேர் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வாக்களித்தனர். எனவே குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. எனவே ரெப்போ ரேட் 6.25 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதற்கேற்ப ரிவர்ஸ் ரெப்போ ரேட்டும் 6 சதவீதமாக குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆய்வுக்கூட்டம் ஏப்ரல் 2-ந் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும். வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு அம்மாதம் 4-ந் தேதி (வியாழக்கிழமை) வெளிவரும். பொதுத்தேர்தலுக்கு முன் இறுதியாக எடுக்கப்படும் கொள்கை முடிவு என்பதால் அப்போது வங்கி வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப் பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடன் வட்டி விகிதங்கள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. சில்லரை விலை பணவீக்கம் நடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் 2.8 சதவீதமாக குறையும் என்றும், அடுத்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) இந்தப் பணவீக்கம் 3.2-3.4 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது
வங்கிப் பங்குகள்
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி ஆய்வுக்கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியாயின. அதில் வளர்ச்சி பற்றிய ஐயப்பாடுகள் பலமாக இருந்ததால் பங்கு வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக வங்கிப் பங்குகள் பலத்த அடி வாங்கின என்பது குறிப்பிடத்தக்கது.