ஒட்டகங்களின் காது, மூக்கு ரகசியங்கள்...

ஒட்டகம் என்று சொன்னதும் பாலைவனமும் சேர்த்துதான் அனைவருக்கும் நினைவு வரும்.
ஒட்டகங்களின் காது, மூக்கு ரகசியங்கள்...
Published on

பாலைவனத்தை வாழ்விடமாகக் கொண்டு வாழும் இந்த மிருகங்களிடம் இருக்கும் விசேஷ திறன் என்னவென்றால் உணவு- நீர் இன்றி நீண்ட காலத்திற்கு இவைகளால் உயிர் வாழ முடிகின்றது.

ஆம், அவற்றின் உடலில் அவசர காலத்திற்குத் தேவையான உணவை முன்கூட்டியே சேமித்து வைக்கும் அமைப்பு இருக்கிறது. அதன் முதுகில் இருக்கும் கட்டி போன்ற அமைப்பை பார்த்திருப்பீர்கள். திமில் என்று அழைக்கப்படும் இதற்குள்தான், ஒட்டகங்கள் பல நாட்களுக்குத் தேவையான கொழுப்பை சேமித்து வைத்துக் கொள்கின்றது. அத்துடன் வயிற்றினுள் சுமார் 4 லிட்டருக்கு மேலான நீரை சேமித்து வைத்துக் கொள்கிறது. அவை சாப்பிடும்போது இயற்கையாகவே இப்படி சிறுபகுதி கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது.

ஒட்டகங்களின் கண் இமைகளைப் பார்த்தீர்களானால் நீண்டு அழகாக இருக்கும். அதற்கான காரணம் மணற்புயல்கள்தான். மணல் பிரதேசமான பாலைவனத்தில் அவை பயணிக்கும்போது அவற்றின் கண்களை தூசுகள், மணல்கள் பாதிக்காமல் இருப்பதற்காக அதன் கண்களும், இமையும் சற்று புடைத்துப் பெரிதாக இருக்கும்.

அதுபோலவே அவற்றின் காதுகளில் அடர்த்தியான முடிகள் காணப்படும். இதுவும் தூசுகள் காதுக்குள் செல்வதை தடுப்பதற்காகத்தான்.

ஒட்டகங்களின் மூக்கை அவதானித்துப் பாருங்கள், இருபுறமும் சவ்வு போன்ற அமைப்பானதாக இருக்கும். இவை கூட அவற்றின் சுவாசத்தில் மணல் துகள்கள் இடையூறு செய்வதை தடுப்பதற்காகத்தான்.

ஒட்டகங்களின் கால்களை அவதானித்துப் பாருங்கள். அடிப்பகுதி தட்டையானதாக அமைந்திருக்கும். காரணம் மணலினுள் புதைவதை தடுப்பதற்காகவே. இயற்கையாகவே இத்தகைய தகவமைப்பு களைப் பெற்றிருப்பதால்தான் ஒட்டகங்களால் பாலைவனத்தில் உயிர்வாழ முடிகிறது.

-சஜிபிரபுமாறச்சன், சரவணந்தேரி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com