

மேற்கு வங்கத்திலோ அது ஊட்டச்சத்து உணவு. இப்படி இந்தியா முழுவதும் பரவி இருக்கும் இந்த உணவுப் பொருளின் தாயகம் இந்தோனேசியா. இதன் உண்மையான பெயர் சேகோ.
அங்குள்ள மெட்ரோசைலான் ஸாகு என்ற ஒரு வகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது இறுதியில் மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கும். இந்த மாவை சிறு, சிறு உருண்டைகளாக திரட்டி சேகோ தயாரிக்கப்படுகிறது.
இந்த உணவுப் பொருள் ஜாவா தீவில் இருந்து இறக்கப்பட்டதால் அது ஜாவா அரிசி என அழைக்கப்பட்டு பிறகு அந்த சொல் மறுவி ஜவ்வரிசி ஆகிவிட்டது. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் ஜவ்வரிசி வேறானது. இந்த ஜவ்வரிசிக்கும் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது.
முதலில் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டு, பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபோது, ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்ய முடியாமல் போனது.
இந்த நிலையில் சேலத்தில், குச்சிக்கிழங்கு மாவை குருணை, குருணையாக மாற்றி ஒரு பாத்திரத்தில் இட்டு வறுத்து அதை ஜவ்வரிசிபோல மாற்றினர். இவ்வாறுதான் இங்கு ஜவ்வரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வியாபாரம் 1943-ம் ஆண்டில் பிரபலம் அடைந்தது. பிறகு இந்த தொழில் சேலத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆனால் 1944-ல் இதற்கு தடை வந்தது. பிறகு இந்த தடை நீங்கியது. இப்படியாக குச்சிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது.
வெளிநாட்டு ஜவ்வரிசிக்கும், குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக் கும் சுவை அளவில் வித்தியாசம் இருக்காது. இதுபோன்ற பல காரணங்களால் குச்சிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு அங்கீகாரம் கிடைத்தது.
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ஜவ்வரிசி குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அல்சர் புண்களை விரைவாக ஆற்றி உணவுக்குழாயில் செரிமானம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சுலபமாக கடந்து செல்ல குடலின் சுவற்றில் வழவழப்புத் தன்மையை உண்டாக்குகிறது. இதனால் அல்சர் குணமாகிறது.
ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வு ஜவ்வரிசி தான். ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் உணவு முறையில் ஜவ்வரிசியை சேர்ப்பது ஆரோக்கியமான விஷயமாகும். இது உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கு நன்மை பயக்கும். ஜவ்வரிசியில் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. அவை கரு வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும் ஜவ்வரிசியானது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.
ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இதனால்தான் உண்ணாவிரதம் இருக்கும் காலங்களில் ஜவ்வரிசி பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் ஆரோக்கியமான முறையில் உங்கள் எடையை அதிகரிக்க விரும்புபவராக இருந்தால் உங்கள் உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு பலன் கிடைக்கும். ஏனெனில் அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவாக இது உள்ளது.
ஜவ்வரிசியானது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு வெளியாதல் போன்ற செரிமானம் தொடர்பான எந்த பிரச்சனையையும் இது சரி செய்கிறது. ஏனெனில் ஜவ்வரிசி செரிமான அமைப்பில் செயல்ப்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதிர்ப்பு ஸ்டார்ச்களை கொண்டுள்ளது.
ஜவ்வரிசியில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. அவை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவிப்புரிகின்றன. இதனால் எலும்பு வலுவடைகிறது. எலும்பின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் இது எலும்பு தொடர்பான பிரச்சனைகள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை வராமல் தடுக்கிறது.
ஆனாலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு அல்ல, ஏனெனில் இதில அதிகமாக சர்க்கரை உள்ளது. ஜவ்வரிசி அதிகமான கார்போஹைட்ரேட்களை கொண்டிருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் ஜவ்வரிசியை தவிர்ப்பது நல்லது.
உடலை குளிர்ச்சி அடைய வைப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு, ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.