மழைக்காலத்தில் காரில் பயணிக்கிறீர்களா? – இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற மறந்துவிடாதீங்க

ஈரமான சாலையில் திடீரென பிரேக் போடும்போது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது
மழைக்காலத்தில்  காரில் பயணிக்கிறீர்களா? – இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற மறந்துவிடாதீங்க
Published on

மழைக்காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவது சற்று சவாலானதாகவே இருக்கும். மழையால் சாலைகள் ஈரமாகி வழுக்கும் தன்மை ஏற்படுவதால், சிறிய கவனக்குறைவுகூட எதிர்பாராத விபத்துக்கு காரணமாகிவிடும். எனவே, மழைக்காலப் பயணத்தில் வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது.

பயணத்திற்கு முன் வாகனத்தைச் சரிபாருங்கள்

நெடுஞ்சாலையில் புறப்படுவதற்கு முன் வாகனத்தின் டயர்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக டயர்களில் போதிய பிடிமானம் இருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பது அவசியம். அதேபோல், பிரேக்குகள், கண்ணாடி துடைப்பான்கள், முன்விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளும் முறையாக செயல்படுகிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

வேகத்தைக் குறைத்து பாதுகாப்பாக செல்லுங்கள்

மழை பெய்யும்போது சாலையின் பிடிமானம் குறையக்கூடும். எனவே, வழக்கமான வேகத்தைவிட குறைவான வேகத்தில் வாகனத்தை இயக்குவது பாதுகாப்பானது. முன்னால் செல்லும் வாகனத்துடன் போதிய இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். இதனால், அந்த வாகனம் திடீரென பிரேக் போடும் சூழலில் நாமும் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்த முடியும்.

திடீரென பிரேக் போடாதீர்கள்

ஈரமான சாலையில் திடீரென பிரேக் போடும்போது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, வேகத்தைக் கட்டுப்படுத்தி, தேவையான நேரத்தில் பிரேக்கை மெதுவாகவும் சீராகவும் பயன்படுத்த வேண்டும்.

கைப்பேசிக்கு ‘நோ’ சொல்லுங்கள்

வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழைக்காலத்தில் சாலையின் நிலைமையை தொடர்ந்து கவனிப்பது மிகவும் முக்கியம் என்பதால், ஓட்டுநரின் முழு கவனமும் சாலையிலேயே இருக்க வேண்டும். மேலும், சாலைப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வேகத்தைக் குறைத்து கூடுதல் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

அவசர நேரத்தில் உதவி பெறுவது எப்படி?

தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது வாகனப் பழுது, விபத்து அல்லது வேறு ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 1033 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் அவசர உதவி தொடர்பான சேவைகளைப் பெற இந்த எண்ணைப் பயன்படுத்தலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com