

புதிய விதிமுறையின்படி, 2028-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் தயாரிக்கப்படும் அனைத்து புதிய வாகனங்களிலும் ‘வி2வி’ தகவல் தொடர்பு அமைப்பைப் பொருத்துவது கட்டாயமாகும்.
இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், வாகனப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றவும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, வாகனங்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள் ளும் 'வி2வி' எனப்படும் தகவல் தொடர்பு அமைப்பு புதிய வாகனங்களில் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதுதொடர்பான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள் ளது. இந்த வரைவு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் கருத்து கள் கேட்கப்பட்டுள்ளன. பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் இறுதி விதிமுறைகள் வகுக்கப்பட இருக்கிறது.
இந்த புதிய விதிமுறையின்படி, 2028-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் தயாரிக்கப்படும் அனைத்து புதிய வாகனங்களிலும் 'வி2வி' தகவல் தொடர்பு அமைப்பைப் பொருத்துவது கட் டாயமாகும். ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார்பஸ் மற்றும் லாரி என அனைத்து வகை யான வாகனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். 2027-ம் ஆண்டிலேயே இந்த தொழில்நுட்பத்தைப் பொருத்த விரும்பும் வாகன நிறுவனங்கள், அரசு நிர்ணயிக்கும் தரநி லைகளுக்கு ஏற்ப அந்த அமைப்பைப் பயன்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வி2வி’ தொழில்நுட்பம் வாகனம் உற்பத்தி செய்யப்படும்போது தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் ஒரு சிறிய கருவி மூலம் செயல்படும். இந்த சாதனம் ரேடியோ சிக்னல்களைப் பயன்படுத்தி, தன்னைச் சுற்றியுள்ள மற்ற வாகனங்களுக்குத் தகவல்களை அனுப்பும். அதேபோல், அருகில் உள்ள வாகனங்களிடமிருந்து வரும் சிக்னல்களையும் பெற்றுக்கொள் ளும். இதில் வாகனத்தின் வேகம், இருப்பிடம், செல்லும் திசை, பிரேக் போடப்பட்டுள்ளதா? போன்ற விவரங்கள் இடம்பெறும். இந்த சிக்னல்கள் சுமார் 150 மீட்டர் முதல் 900 மீட்டர் வரை கிடைக்கும். இதற்கு செல்போன் 'நெட்வொர்க்' தேவையில்லை. தனி ரேடியோ அலைவரிசை மூலம் தகவல்கள் பரிமாறப்படும்.
இந்த தொழில்நுட்பம் விபத்துகளைத் தவிர்க்க பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலையில் முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் போட்டால், அந்தத் தகவல் பின்னால் வரும் வாகனத்திற்கு உடனடியாகக் கிடைக்கும். இதனால் டிரைவர் முன்கூட்டியே தன்னுடைய வாகனத்தின் வேகத்தைக் குறைத்து விபத்தைத் தவிர்க்க முடியும். மேலும், இரவு நேரத்தில் தவறான பாதையில் வரும் வாகனங்கள், பின்னால் வரும் ஆம்புலன்ஸ், திடீரென பாதை மாறுதல் மற்றும் வளைவான சாலை சந்திப்புகளில் இருந்து வரும் வாகனங்கள் குறித்த எச்சரிக்கைகளை முன்கூட்டியே அறிந்து சாமர்த்தியமாக செயல்படமுடியும்.
தற்போதுள்ள மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்பான 'ஏடாஸ்' உடன் இணைந்து இந்த 'வி2வி' தொழில்நுட்பம் செயல்படும். கேமரா மற்றும் சென்சார்களால் கண்டறியமுடியாத ஆபத்துகளையும் இது முன்கூட்டியே தெரிவிக்கும். தற்போது சாலைகளில் ஓடும் வாகனங் களில் இந்த வசதியை நடைமுறைப்படுத்த முடியாது என்பதால், அவற்றை கேமரா மற்றும் சென்சார்கள் மூலம் புதிய வாகனங்கள் கண்டறியும். பழைய வாகனங்கள் சென்சார்களின் கண்காணிப்பு எல்லைக்குள் இருந்தால், அது குறித்தும் புது தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்களை இயக்குபவருக்கு எச்சரிக்கை கிடைக்கும். எதிர்காலத்தில் பழைய வாகனங்களிலும் ‘வி2வி’ வசதியைப் பொருத்தும் திட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.