

2011-ம் ஆண்டில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமியை தூண்டியது. புகுஷிமா அணு உலை விபத்து ஏற்படவும் வழிவகுத்துவிட்டது.
உலகிலேயே நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் விளங்குகிறது. அந்த நாட்டின் புவித்தட்டு அமைப்பே அதற்கு காரணம். அதாவது பெரிய புவி மேலோட்டு தட்டுகள் ஒன்றொடொன்று மோதிக் கொண்டும், ஒன்றுக்கொன்று அடியில் நழுவிக்கொண்டும், ஒன்றோடு ஒன்று உராய்ந்துகொண்டும் இருக்கின்றன. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலநடுக்கங்களுக்கு ஜப்பான் உள்ளாகி வருகிறது.
பசிபிக் நெருப்பு வளைய மண்டலத்திற்குள் அமைந்துள்ள ஜப்பான். பசிபிக் தட்டு, பிலிப்பைன் கடல் தட்டு, யூரேசிய தட்டு (அமூர் தட்டு என்றும் அழைக்கப்படுகிறது), மற்றும் வட அமெரிக்க தட்டு (ஒகோட்ஸ்க் தட்டு) ஆகிய நான்கு புவித்தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. இந்தத்தட்டுகள் அனைத்தும் ஆண்டுதோறும் சிறிதளவு (சில சென்டி மீட்டர்கள் வரை) மட்டுமே நகர்ந்தாலும், நிலத்தடியில் கணிசமான அழுத்தத்தை உருவாக்குகின்றன.
அந்த அழுத்தம் அதிகமாகும்போது, பூமி அதிரத்தொடங்கும். சில சமயத்தில் மக்களால் உணர முடியாத அளவுக்கு பலவீனமான அதிர்வு வெளிப்படும். அதேபோல் மண் சரிவு, நாட்டின் உள்கட்டமைப்புகளை சேதமடைய செய்யும் வலுவான நில நடுக்கமாகவும் மாறும். கடும் சேதத்தையும், மனித உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் சுனாமியாகவும் மாறக்கூடும்.
ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மென்மையான அதிர்வாக இருக்கும். எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஜப்பானில் கணிசமான எண்ணிக் கையில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இரண்டு தட்டுகள் மோதும்போது. ஒரு தட்டு மற்றொன்றின் கீழ் தள்ளப்பட்டு புவி மேலோட்டிற்குள் மூழ்குகிறது. ஜப்பானைப் பொறுத்தவரை, பசிபிக் தட்டு வடக்கு ஜப்பான் பகுதியில் இருக்கும் தட்டின் கீழ் உள் வாங்கப்படுகிறது. மேலும் தெற்கே, பிலிப்பைன் கடல் தட்டு தென்மேற்கு ஜப்பானில் உள்வாங்கப்படுகிறது. இந்த இரண்டு உள்வாங்கல் மண்டலங்களும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த சில நிலநடுக்கங்களை உருவாக் கும் திறனை கொண்டுள்ளன. ஜப்பானில் மாபெரும் நிலநடுக்கங்கள் ஏற் பட்டதற்கு காரணம் இவைதான்.
2011-ம் ஆண்டில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமியை தூண்டியது. புகுஷிமா அணு உலை விபத்து ஏற்படவும் வழிவகுத்துவிட்டது. அதற்கு முன்பு நடந்த முந்தைய பேரழிவுகளுள், 1923-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் கடுமையானது. அந்த நிலநடுக்கம் டோக்கியோ மற்றும் யோகோஹாமா நகரங்களை பேரழிவுக்குள்ளாக்கியது.
ஜப்பானில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்றாலும், பாதிப்பை குறைப்பதற்கு அந்த நாடு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஏற்ப கட்டமைப்புகளை நிறுவிக்கொண்டிருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணமாக கடுமையான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வானளாவிய உயரத் திற்கு எழுப்பப்படும் கட்டிடங்கள் கூட அதிர்வு உறிஞ்சுகள், நெகிழ்வான அடித்தளங்கள், உறுதியான பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. அவை நிலநடுக்கங்களால் இடிந்து விழுவதற்கு பதிலாக மெதுவாக அசைந்து அதிர்வை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
பூகம்ப எச்சரிக்கை விடுக்கும் அதிநவீன அமைப்புகளில் ஒன்றையும் ஜப்பான் கொண்டுள்ளது. அவை பேரழிவை ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு முன்னதாகவே நில அதிர்வு அலைகளை கண்டறிகிறது. மக்களுக்கும் உடனடி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஜப்பானிய அதிவேக ரெயிலான ஷிங்கன்சென், சக்திவாய்ந்த பூகம்பங்களை கண்டறியும்போது தானாகவே வேகத்தை குறைத்து நின்றுவிடும் திறன் கொண்டது.
பொதுமக்களிடையே இயற்கை அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்வியலில் ஆழமாக வேரூன்றியுள்ளது. வீடுகளில் தண்ணீர், உணவு, தீப்பெட்டிகள், மின்கலங்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பேரிடர் பாதுகாப்பு பெட்டிகளை தவறாமல் சேமித்து வைக்கின்றனர்.