தமிழகத்துக்கு ‘எல்நினோ' என்ன தரப்போகிறது?

தென் மாநிலங்களில் மழைப்பொழிவு இயல்பைவிட குறைந்துள்ளது. முக்கிய அணைகளிலும் நீர் இருப்பு குறைந்திருக்கிறது.
தமிழகத்துக்கு ‘எல்நினோ' என்ன தரப்போகிறது?
Published on

ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழந்தமிழர் வாக்கு.

ஆனால், இந்த ஆண்டு விதை தேடும் காலத்திலேயே தமிழக விவசாயியின் பார்வை வானத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. காரணம், மழை. இந்தியாவின் தென்மேற்கு பருவமழையின் போக்கு இந்த ஆண்டு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தென் மாநிலங்களில் மழைப்பொழிவு இயல்பைவிட குறைந்துள்ளது. முக்கிய அணைகளிலும் நீர் இருப்பு குறைந்திருக்கிறது. அதன் தாக்கம் தமிழகத்திலும் தெரிகிறது.

காவிரியில் நீர் திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் படும். ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் அந்த நாளில் தண்ணீர் திறக்க முடியவில்லை. ஜூன் 12-ந் தேதி அணையில் 41.57 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பு இருந்தது. முழு கொள்ளளவு 93.47 டி.எம்.சி. ஆகும்.

குறுவை சாகுபடியை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு இது சாதாரண தாமதம் அல்ல. விதை போட வேண்டிய நேரத்தில் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை. இதன் பின்னணியில் இருக்கும் காரணம் 'எல் நினோ'.

கடலில் என்ன நடக்கிறது?

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு நீர் வழக்கத் தைவிட அதிகமாக வெப்பமடைவதுதான் 'எல் நினோ'. கடலில் ஏற்படும் இந்த வெப்ப மாற் றம் கடலோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. கடலின் வெப்பநிலை மாறும்போது காற்றின் சுழற்சியிலும் மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் மழை பெய்யும் இடங்களையும், மழையின் அளவையும் பாதிக்கிறது. அதனால்தான் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றம், பல ஆயி ரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவையும் பாதிக்கிறது.

ஒரு கடலில் கொஞ்சம் வெப்பம் அதிகரிக்கிறது. அதன் எதிரொலி வேறு ஒரு கண்டத்தில் மழையாகவோ, வறட்சியாகவோ வெளிப்படுகிறது. இயற்கையின் இந்தத் தொடர்புதான் எல் நினோவின் ஆச்சரியம். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்துக்கு மாறாக 1½ டிகிரி செல்சியஸ் வெப்பமடையும் ஒரு நிகழ்வுதான் 'எல் நினோ'. அதுவே 2 டிகிரி செல்சிய சுக்கும் மேல் அதிகமான வெப்பநிலையை எட்டினால் விஞ்ஞானிகள் இதை "சூப்பர் எல் நினோ" என குறிக்கின்றனர்.

நேரடிப் பகை

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துக்கு உந்துசக்தியாக இருப்பது தென்மேற்குப் பருவமழை ஆகும். எல் நினோவுக்கும் இந்தியப் பருவமழைக்கும் 'நேரடிப் பகை' உண்டு. கடந்த ஜூலை 29-ந் தேதி நிலவரப்படி இந்தியாவின் தென் மாநிலங் களில் மழைப்பொழிவு இயல்பைவிட 28.3 சதவீதம் குறைந்துள்ளது.

நாடு முழுவதையும் எடுத்துக்கொண்டால் மழைப்பற்றாக்குறை 15.4 சதவீதம் ஆகும். இந்த மழையளவு குறைந்தால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம் தான். இந்த ஆண்டு காரிப் பயிர் சாகுபடி மொத்தத்தில் 80.96 சதவீதம் அளவுக்கு நடந்துள்ளது. அதில் நெல் சாகுபடி 73.18 சதவீதம். பருப்பு வகைகள் 76.99 சதவீதம், தானியங்கள் 77.24 சதவீதம், பருத்தி 82.49 சதவீதம், எண்ணெய் வித்துக்கள் 86.13 சதவீதம் ஆக சரிந்தது.

குறுவை விவசாயிகள்

தமிழகத்தின் நிலை இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட சற்று மாறுபட்டது. தமிழகத்துக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழையும் முக்கியமானவை. குறிப்பாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வடகிழக்குப் பருவமழை மிக முக்கியமானது.

ஆனால், காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு தென்மேற்கு பருவமழை காலத் தில் கேரளம், கர்நாடகா பகுதிகளில் பெய்யும் மழையும் காவிரி நீர்வரத்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறுவை சாகுபடி தொடங்கும் காலத்தில் தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால் கர்நாடகா மற்றும் கேரளத்தில் போதிய மழை இல்லாமல் போனதால் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால்தான் எல் நினோ என்பது வெறும் வானிலை ஆய்வா ளர்களின் பேச்சாக இல்லாமல், தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு தொடர்புடைய விஷ யமாக மாறுகிறது.

12 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு?

சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்ப டக்கூடும் என்று வேளாண்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார். குறுவை சாகு படி நடைபெறும் காலத்தில் இந்த மாவட்டங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிப்பதற் காக முன்னெச்சரிக்கை திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் எல் நினோவின் தாக்கத்தை தமிழக அரசு எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொண் டுள்ளது என்பது தெரிகிறது.

எல் நினோவைப் பற்றிய இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. எல் நினோ ஆண்டு களில் இந்திய தென்மேற்கு பருவமழை பலவீனமடையும் வாய்ப்பு இருந்தாலும், தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழை அதே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது.

தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழைக்கும் எல் நினோவுக்கும் தொடர்பு இருப்பதாக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி எல் நினோ ஆண்டுகளில் தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் வாய்ப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

இதனால் தமிழகத்துக்கு ஒரு வித்தியாசமான சிக்கல் உள்ளது. மழை குறைந்தாலும் பிரச் சினை. மழை அதிகமாக பெய்தாலும் பிரச்சினை. மழை குறைந்தால் விவசாயத்துக்கும் குடிநீ ருக்கும் தட்டுப்பாடு. மழை அதிகமாக பெய்தால் வெள்ளம், சாலைகள் துண்டிப்பு, குடியிருப் புகளில் தண்ணீர் புகுதல் போன்ற பாதிப்புகள். இந்த இரண்டுக்கும் இடையேதான் தமிழகத் தின் பருவமழை வாழ்க்கை நகர்கிறது.

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு வெப்ப மாற்றம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழகத்தின் விவசாயியையும் பாதிக்கக்கூடும். இதுதான் இயற்கையின் வியப்பாகவும், அதே நேரத்தில் அதன் எச்சரிக்கையாகவும் இருக்கிறது. எல் நினோவை மனி தர்களால் தடுக்க முடியாது. ஆனால் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள முடியும். எல் நினோ சொல்லும் பாடமும் அதுதான். மழை குறைந்தால் வறட்சி. அதிகமாக பெய்தால் வெள்ளம். இயற்கையின் இந்த இரு முகங்களுக்கும் நடுவேதான் தமிழக மக்களின் வாழ்க்கைப் போராட்டம் உள்ளது.

'எல் நினோ' பெயர் எப்படி வந்தது?

'எல் நினோ' என்ற பெயருக்கு பின்னாலும் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. பெரு என்ற நாட் டைச் சேர்ந்த மீனவர்கள் பல ஆண்டுகளாக கடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து வந்தனர். கிறிஸ்துமஸ் காலத்தில் கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தைவிட வெப்பமாக மாறுவதையும், அதன்பி றகு மீன்களின் வரத்து குறைவதையும் அவர்கள் கவனித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்த நிகழ்வு ஏற்படுவதால், ஸ்பானிஷ் மொழியில் இதற்கு 'எல் நினோ' என்று பெயர் வைத்தனர். 'எல் நினோ' என்பதற்கு 'குழந்தை' என்று பொருள். கிறிஸ்துமஸ் காலத்தை கருத்தில் கொண்டு இது 'குழந்தை ஏசு' என்ற பொருளிலும் குறிப்பிடப்படுகிறது. காலப்போக்கில், இந்த பெயர் பசிபிக் பெருங்க டலில் ஏற்படும் குறிப்பிட்ட கடல்-வளிமண்டல மாற்றத்தைக் குறிக்கும் உலகளாவிய பெயராக மாறிவிட்டது.

உலக அளவில் ஏற்படும் விளைவுகள்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை எல் நினோ நிகழ்வு ஏற்படும் என்றால் நூறாண்டுகளில் ஓரிரு முறை சூப் பர் எல்நினோ நிகழ்வு உண்டாகும். சூப்பர் எல் நினோ ஒட்டு மொத்த உலக வானிலையையும் சீர்கு லைக்கும் தன்மை கொண்டது. வறண்ட பகுதிகளுக்குப் பெருமழையையும், அதிக மழை பெய்யும் பகுதிகளுக்குக் கடுமையான வறட்சியையும் கொடுக்கும். 2026-ம் ஆண்டை சூப்பர் எல் நினோ ஆண் டாக ஐ.நா.சபை அறிவித்து உலக உணவுத் திட்டம் மூலமாக உலகுக்கு மிகக் கடுமையான எச்சரிக் கையை விடுத்துள்ளது.

தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கரீபியன் தீவு நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்டவற்றில் தீவிர மான வெப்ப அலைவீச்சு, காட்டுத்தி. பருவமழை பொய்க்கும் நிலை ஏற்படும் என ஐ.நா. தெரிவித்துள் ளது. இதுவே கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியாவில் சீரற்ற மழைப்பொழிவு, எதிர்மறையான வானிலை ஆகியவை ஏற்படும். இதனால் உலகம் முழுவதும் 45 நாடுகளில் உள்ள 27.4 கோடி மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com