

சார்ஜா,
சூரியனில் உள்ள கருப்பு புள்ளிகளில் இருந்து பூமியை நோக்கி வரும் அதிக கதிர்வீச்சு கொண்ட சூரிய புயல் பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்று சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் துணை பொது இயக்குனர் டாக்டர் இலியாஸ் பெர்னினி கூறியதாவது:-
சூரியனில் கருப்பு புள்ளி என்றால் அது உண்மையில் கருப்பான நிறத்தில் உள்ள புள்ளி அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் நமக்கு கரும் புள்ளியாக தெரிகிறது. கருப்பு புள்ளியை சுற்றியுள்ள இடத்தில் வெப்பம் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது என்றால் புள்ளி உள்ள இடத்தில் வெப்பம் சுமார் 4 ஆயிரத்து 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உருவாகலாம்.
கடந்த 1989-ம் ஆண்டில் கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் அப்போது சூரியனில் ஏற்பட்ட புயல் காரணமாக கடும் மின்சார அதிர்வை ஏற்படுத்தியது. அதாவது சூரிய புயல் உருவானதால் அதில் இருந்து வெளிப்பட்ட சக்திவாய்ந்த காந்த புலமானது பூமியை கடந்து சென்றபோது மத்திய மற்றும் வடக்கு கனடா பகுதிகளின் வானில் 2 நாட்களுக்கு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது.
தற்போது நிறைய தொழில்நுட்பங்கள் இது குறித்த ஆய்வுக்கு கைகொடுக்கிறது. பொதுவாக இதுபோன்ற சூரிய புள்ளிகள் 11 ஆண்டுகால இடைவெளியில் தோன்றுகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் நாசா விண்வெளி ஏஜென்சி கண்டுபிடித்த சூரிய புள்ளியைவிட மிகப்பெரிய சூரிய புள்ளிகள் தோன்றியுள்ளதை சார்ஜா விஞ்ஞானிகள் இந்த ஆண்டில் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
இந்த சூரிய புள்ளிகளை சிறப்பு தொலைநோக்கி கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் பூமியை விட 5 மடங்கு பெரிதான அளவில் உள்ளது தெரியவந்துள்ளது. வருகிற 2022-ம் ஆண்டில் இந்த சூரிய புள்ளிகள் பூமியில் சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் இந்த கருப்பு புள்ளியில் இருந்து வரும் சூரிய புயலில் உள்ள மின்காந்த கதிர்வீச்சு காரணமாக சேதமடைய கூடும்.
இதுபோல் தோன்றிய சூரிய புயலால் கடந்த 2003-ம் ஆண்டில் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு இருந்த 2 செயற்கைக்கோள்கள் சேதமடைந்தது. இதுவரை இதுபோன்ற விளைவுகளால் 28 செயற்கைக்கோள்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பூமியில் உள்ள கரும்புள்ளிகள் அதிகரித்துக் காணப்படும் கால கட்டத்தில் சூரியனில் ஏற்படும் அதிர்வலைகள் காரணமாக மனிதன் உருவாக்கிய செயற்கை அமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால் விஞ்ஞானிகள் அதனை எப்போதும் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது இன்று (செவ்வாய்க்கிழமை) சூரியனில் உள்ள கருப்பு புள்ளிகளில் இருந்து அதிக கதிர்வீச்சு கொண்ட சூரிய புயல் தோன்ற உள்ளது. இந்த புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் அதன் தீவிரத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.