

பிரச்சினையை கண்டு எந்த நிலையிலும் மன உறுதியை இழந்துவிடக்கூடாது. எப்போதும் மன உறுதியோடு இருக்க வேண்டும். வெற்றி, தோல்விகளின் தாக்கம் ஒருவனை நிலைகுலைய செய்துவிடக்கூடாது. இதை மாணவ, மாணவிகள் இளம் வயதிலேயே கற்றுக் கொள்ள வேண்டும். நெருக்கடி ஏற்படுகிறபோது அதை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அவதூறுகளை புறம் தள்ளிவிடவேண்டும். நம்மை பற்றிய குறைகளை கேட்கும் போது அதில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். தவறான கருத்துகள் சொல்லப்படுமானால் அதை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட வேண்டும்.
மாணவர்கள் தங்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது தொடர்பாக யார் அறிவுறுத்தினாலும் கேட்டு நடக்க முன்வரவேண்டும். மேலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்து தீர்வுகாண வேண்டும். பள்ளி சூழலில் மாணவர்கள் நண்பர்களிடம் நல்லமுறையில் பேசிப்பழக வேண்டும். கோபம், விரோதம் போன்றவற்றுக்கு இடம் அளித்துவிடக்கூடாது. அது மனரீதியாக தறவான பாதைக்கு மாணவர்களை அழைத்து சென்றுவிடும். மன அழுத்தம் ஏற்படுத்தும் சம்பவம் ஏதும் நடந்தால் நல்லமுறையில் விவாதித்து தீர்வுகாண வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது உண்டு. தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது. எனவே மாணவர்கள் நேர்மறை சிந்தனையோடு பிரச்சினைகளை அணுகவேண்டும். பிரச்சினைகளை கடந்து போகும் போது தான் வெற்றி கிடைக்கும். நம்முடைய நடவடிக்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அணுகி விமர்சனம் செய்வார்கள். அதை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.
எப்போது விமர்சனம் எழத்தொடங்குகிறதோ, அப்போது தான் ஒருவருக்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் மாணவர்களுடன் இயல்பாக பழக வேண்டும். அவர்களின் கருத்துக்கும், எண்ணத்துக்கும் ஆசிரியர்கள் மதிப்பு அளிக்க வேண்டும். எதையும் காரணம் காட்டி மாணவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது. அது அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இளைய தலைமுறையினர் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய பங்காளர்கள். அவர்கள் எந்த நிலையிலும் மன உறுதியை இழந்து விடக்கூடாது. அதுதான் எல்லாவற்றையும் சாதிக்க கூடிய சக்தி என்ற நம்பிக்கையுடன் களம் இறங்க வேண்டும். அப்போது தான் வெற்றியாளனாக அல்ல சராசரி மனிதனாக நடமாட முடியும். எதையும் தைரியத்தோடும், நேர்மறையான சிந்தனையோடும் எதிர்கொள்ளும் போது எந்த பிரச்சினையிலும் இருந்து மீண்டும் வரமுடியும். இதனை ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் உணர வேண்டும்.