

சென்னை,
இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக வலைதளங்கள் பொழுதுபோக்குக்கான தளமாக மட்டுமின்றி, பலருக்கு வருமானம் ஈட்டும் முக்கிய வழியாகவும் மாறியுள்ளன. குறிப்பாக, யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், யூடியூப் நிறுவனம் வருவாய் பகிர்வை பெறுவதற்கான தகுதிகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனால், இனி யூடியூப்பில் பணம் சம்பாதிப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது. யூடியூப்பின் இந்த விதிகள் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
யூடியூப் குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களை ஈர்க்கும் சேனல்களுக்கு யூடியூப் நிறுவனம் விளம்பர வருவாயில் பங்கினை வழங்கி வருகிறது. இதனால், யூடியூப்பில் வீடியோ பதிவேற்றுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டு பலர் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், யூடியூப்பில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி விதிகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு சேனல் கடந்த ஓராண்டில் குறைந்தது 8 ஆயிரம் மணி நேரம் பார்வை நேரத்தை பெற்றிருக்க வேண்டும். அதேபோல், ‘ஷார்ட்ஸ்’ எனப்படும் குறுகிய கால வீடியோக்களுக்கு கடந்த 90 நாட்களில் குறைந்தது 2 கோடி பார்வைகள் கிடைத்திருக்க வேண்டும்.
முன்னதாக, யூடியூப் வருவாய் பகிர்வைப் பெறுவதற்கு கடந்த ஓராண்டில் 4 ஆயிரம் பார்வை நேரம் பெற்றிருக்க வேண்டும். ‘ஷார்ட்ஸ்’ வீடியோக்களைப் பொறுத்தவரை, கடந்த 90 நாட்களில் 1 கோடி பார்வைகள் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. தற்போது இந்த இலக்குகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன்படி, நீண்ட நேர வீடியோக்களுக்கு 8 ஆயிரம் பார்வை மணி நேரங்களும் ‘ஷார்ட்ஸ்’ வீடியோக்களுக்கு 90 நாட்களில் 2 கோடி பார்வைகளும் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஒரு சேனலுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் சந்தாதாரர்கள் இருக்க வேண்டும் என்ற தற்போதைய விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
‘ஷார்ட்ஸ்’ வீடியோக்கள் மூலம் தொடர்ந்து விளம்பர வருமானம் பெற விரும்புபவர்கள், 90 நாட்களில் 1 கோடி பார்வைகள் என்ற அளவை தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டும் என்றும் யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யூடியூப்பை வருமானத்துக்கான முக்கிய தளமாக பயன்படுத்தி வரும் படைப்பாளிகள், இனி பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்க்கும் வகையில் தரமான மற்றும் பயனுள்ள வீடியோக்களை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.