

சென்னை,
சென்னையில் பல் டாக்டராக பணியாற்றிவவர் இமயவள்ளி. இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கும்பகோணம், நெல்லத்தநல்லூர் அசுர்குளம் பகுதியில் பயணிகள் வாகனத்தில் சென்றார். இந்த வாகனத்தை அவர் கணவர் ராதாகிருஷ்ணன் ஓட்டினார். அப்போது, எதிர் திசையில் வேகமாக வந்த சரக்கு வாகனம், ஒன்று இந்த வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் டாக்டர் இமயவள்ளி மரணம் அடைந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில், இழப்பீடு கேட்டு இமயவள்ளியின் கணவர் ராதாகிருஷ்ணன், மகன் ஹெம்தேவ் தர்சன், தந்தை செல்வம், தாய் ஜோதி ஆகியோர் கூட்டாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஏ.பி.நஷீர்அலி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.எஸ்.பிலால், "டாடா ஏஸ் வாகனத்தில் டாக்டர் இமயவள்ளி பின்புறம் உட்கார்ந்திருந்தார். எதிர்தரப்பில் வேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்த சரக்கு வாகனத்தினால் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் இமயவள்ளி மரணமடைந்துள்ளார்” என்று வாதிட்டார். விபத்துக்குள்ளான சரக்கு வாகனம் காப்பீடு செய்திருந்த காப்பீட்டு நிறுவனம் தரப்பில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "விபத்தில் பலியான டாக்டர் தனியார் ஆஸ்பத்திரியில் மாதம் ரூ.55 ஆயிரத்து 200 ஊதியமாக பெற்றுள்ளார். இதுதவிர தனியாக கிளினிக்கும் நடத்தி வந்துள்ளார். இறக்கும்போது அவரது வயது 35 தான்.
எனவே, அவரது மரணத்துக்கு ஒரு கோடியே 4 லட்சத்து 64 ஆயிரத்து 462 ரூபாய் இழப்பீடாக நிர்ணயம் செய்கிறேன். இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 சதவீத வட்டியுடன், அவரது கணவர் உள்ளிட்டோருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கவேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.