திருநெல்வேலியில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது


திருநெல்வேலியில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
x

போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தனியார் மாவு மில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஆலங்குளம், அருணாச்சலபுரம், தெற்குத் தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 28), ராஜாஜி(25), ரமேஷ்(24) ஆகிய 3 பேரையும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர்கள் 1 கிலோ 50 கிராம் எடை கொண்ட போதை சாக்லேட் மற்றும் 6 மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் மேற்சொன்ன 3 பேரையும் கங்கைகொண்டான் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முருகேசன், ராஜாஜி, ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து மேற்சொன்ன போதைப் பொருட்களை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.

1 More update

Next Story