

காரைக்குடி
காரைக்குடி இடத்தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 58). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு சம்பவத்தன்று காலையில் பல்கலைக்கழக சாலை ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியிலிருந்து காரைக்குடி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக திருப்பதி மீது மோதியது. இதில் திருப்பதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார், விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் சிவகங்கையை சேர்ந்த செல்வம் (51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் செல்வத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.