

உசிலம்பட்டி,
1 வயது குழந்தை
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள எம்.அய்யம்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 4 வயதில் பாண்டிச்செல்வி என்ற பெண் குழந்தையும், 1 வயதில் கிஷார் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. பாண்டிச்செல்வி தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள்..
பள்ளி முடிந்து அவள் நேற்று மாலை வீடு திரும்பினாள்.. பள்ளி வாகனத்தில் இருந்து வீட்டின் அருகே பாண்டிச்செல்வி இறங்கினாள். தாயார் சாந்தி, மகளை அழைக்க சென்றார். அப்போது 1 வயது குழந்தை கிஷோரை வீட்டின் முன்பாக விட்டுவிட்டு பள்ளி வாகனம் அருகே சென்றார்.
வாகனம் மோதி பலி
பள்ளி வாகனத்தில் இருந்து பாண்டிச்செல்வி இறங்கியதும், டிரைவர் கண்ணன் மீண்டும் வாகனத்தை எடுத்தார். அப்போது குழந்தை கிஷோர் திடீரென பள்ளி வாகனத்தின் டயர் முன்பு வந்ததான். இதில் பள்ளி வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் குழந்தை கிஷோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.